Wednesday, October 29, 2014

வெளிவராத கவிதைகள் - 2

ஞானஸ்நானம் 

சவுதாமினியின் அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் நேத்து 
பெரிய சண்டையாம் 
ஹோம்வொர்க் செய்யலன்னு 
டீச்சர் திட்டினதுக்கு 
அப்படி சொல்லிட்டு அழுதா 
ப்ளீஸ்பா நானும் ஹோம்வொர்க் 
செய்யும்போது மட்டும் 
நீங்க சண்டைபோடாதீங்க 
என கைகளுக்குள் புகுந்து 
தாடையை தடவி
அவள் சொல்லி 
முடித்தபோது ஆட்டுக்குட்டியின் 
கைகளில் கர்த்தராகியிருந்தேன் !! 

வருத்தங்களுக்குஅப்பால்

ஆடித்தள்ளுபடிகளில் கூட 
உடை வாங்கித்தராதவனென்று 
அட்சயதிருதியைகளில் கூட
நகை வாங்கித்தராதவனென்று 
பண்டிகைநாட்களில் கூட 
பொருள் வாங்கித்தராதவனென்று 
சம்பளதினங்களில் கூட 
இனிப்பு வாங்கித்தராதவனென்று 
மூகூர்த்ததினங்களில் கூட
பூக்கள் வாங்கித்தரதாவனென்று
அவளுக்கிருக்கும் ஏகவருத்தங்களுக்கு
அப்பால் சிறு தலைவலிக்கு 
பதறியடித்து தைலமொன்றை
தடவிவிடும் பேரன்பும் இருக்கிறது !!

முத்தக்கதை 

கூட்டுக்குள் அலகுகள் மோதும் 
குருவி முத்தம்
இலைகளை சினுங்க வைக்கும்
காற்றின் முத்தம்
மூச்சைப்போல் கரையை தீண்டும்
அலை முத்தம்
மோகம்தீர மேகத்தில் புகும்
நிலவு முத்தம்
பூக்களுக்குள் எப்போதும் தீராத 
தேனீ முத்தம்
புல்வெளியில் ஊர்ந்து தீர்க்கும்
பாம்பு முத்தம் 
தண்டவாளங்களில் நீண்டபடி இருக்கும்
ரயில் முத்தம் 
என மேலதிக முத்தங்கள் 
தீர்ந்த பிறகும் 
உனக்காய் எப்போதும் மிச்சமிருக்கும்
ஒரு கொசுறு முத்தம் !!
---------------------------------------------------------------------------------------------------------------------------

2 comments: