Sunday, February 14, 2016

விசாரணை - தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமா


"உலகில் பொய் மட்டுமே ஆட்சி செய்யும் போது உண்மையைச் சொல்வதே பெரும் புரட்சி" - ஜார்ஜ் ஆர்வெல்

தமிழ்த்திரை வரலாற்றில் தங்கப்பதக்கம் முதல் வரிசை வகுத்து வந்து கொண்டிருக்கும் சிங்கம் வரை காவல்துறை/காவலதிகாரிகள் வாழ்க்கை எனும் கதையம்சங்களோடு பெரும்பான்மையான சினிமாக்கள் வந்திருக்கின்றன. இவையனைத்தும் அந்த அமைப்பு மற்றும் அதன் அதிகாரிகளின் எல்லைதாண்டிய அதிகாரங்களை ஹீரோயிசமாக முன்னிறுத்தி காவல்துறை நம் நண்பன். குற்றவாளிகளுக்கு பகைவன் எனும் நவீனத்துவ மந்திரத்தை போற்றிப் பாதுகாத்து/ பறைசாற்றி பார்வையாளனுக்கு அளிக்கத் தவறியதே இல்லை. இத்தகைய எதிர்கேள்விகளற்ற திணிப்புகளிலிருந்து சற்றே மாறுபட்டு அந்த அமைப்பை கேள்வி/விமர்சனங்களுக்குள்ளாக்கும் படைப்புகளாக மகாநதி, கிருமி சினிமாக்களை பார்க்கலாம். ஆயினும் மகாநதியின் மையமுடிச்சும், கிளைக்கதையும், வேறு தளங்களிலும் பயணிப்பதால் அதை விலக்கிவிட்டு கிருமியை வேண்டுமானால் விசாரணைக்கு மிக நெருக்கத்தில் கொண்டு வரலாம். ஏனெனில் கிருமி எழுப்பும் கேள்வியும் விசாரணையின் முதல்பகுதி எழுப்பும் கேள்வியும் ஒன்றுதான். உண்மையில் காவல்துறை நம் நண்பனா? என்பதுதான் அது. கேள்வியெழுப்பதலோடு நின்றுவிடும் கிருமியிலிருந்து விசாரணை விலகிச்செல்லும் இடமாக நாம் கருதவும், பின் நவீனத்துவம் என முன்வைக்கவும் வலுவான காரணமாக இருப்பது விசாரணையின் இரண்டாம்பகுதி. இங்கேதான் இந்தப்படம் காவல்துறை எனும் அமைப்பை மேல்/கீழ் அகம்/புறம் என நாலாப்புறமும் சுற்றிச் சுழன்று அலசுகிறது

விசாரணையின் முதல்/இரண்டாம் பகுதியென மொத்தப்படமும் காவல்துறை எனும் அமைப்பின் அத்தனை நவீனத்துவத்தையும் கேள்விக்குள்ளாக்கி அங்கு அரசபயங்கரவாதம் என்பது என்ன? அதில் மெய்யான ஆதாயம் பெருபவர்கள் யார்? ஒடுக்கப்படுபவர்கள் யார்? அமைப்பின் அதிகாரங்களின் எல்லை எதுவரை? அதற்கு ஒரு சிக்கல் நேரிடின் அதிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள யாரை/எதை எல்லாம் பலி கொடுக்க முனையும். மனிதம் சார்ந்த இயங்கியல் தன்மை என்பது அங்கு சாத்தியமா? இந்தப்பெரும் சிலந்திவலையில் சிக்குறும் எளிய மனிதர்களின் கதி என்னவாகும்? போன்ற பல்வேறு கேள்விகளையும் துடுக்குறச்செய்யும் பதில்களையும் படத்தில் நிகழ்த்தப்படும் இரண்டுவிதமான விசாரணைகள் மூலம் இத்திரைப்படம் முன்வைக்கின்றன. 

முதல் விசாரணையானது, 

நாதியற்ற,பொருளற்ற,அதிகாரமற்ற, எளிய மனிதர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையின் மூலம் செய்திராத குற்றங்களை அவர்கள் தலையில் சுமத்தச் செய்து அதன் மூலம் தங்கள் சுயநலன்களை பூர்த்தி செய்துகொள்ளும் காவல் அமைப்பின் அதிகார செயல்பாடுகளை துல்லியமாக பட்டியலிடுகின்றன. கண்ணில் பட்ட வழிப்போக்க இஸ்லாமிய இளைஞனை அல்கொய்தாவுடனும், லஷ்கர் ஈ தொய்பாவுடனும் பொருத்திப்பார்க்கும், பொது-அதிகார புத்திகளையும், தமிழன் என்றால் விடுதலைப்புலி எனப் பொருத்திப்பார்க்கும் ஒன்றுபட்ட இந்திய தேசத்திம் அண்டை மாநில பொது-அதிகாரப்புத்திகளையும் பட்டவர்த்தனமாக முன்னிறுத்துகின்றன. காவல் நிலையம் எனும் அமைப்பில் சிக்கிக்கொள்ளும் எளிய மனிதர்கள் உள்நுழைந்த மறுவினாடி அவர்களின் முதல் கேள்விகளுக்கு எதிர்க்கொள்ளும் கட்டற்ற வன்முறையும், அவர்கள் தங்கவைக்கப்படும் இடமும், நடத்தப்படும் விதமும் என காவல்துறையின் வர்கபேத அணுகுமுறைகளையும் சமநிலையன்றி பிற்பாதியில் நிகழும் மற்றொர் விசாரணை மூலமும் புடம்போட்டு விளக்கிவிடுகிறது.

 இரண்டாவது விசாரணையானது, 

அதிகார வர்கத்தின் பணக்காவலாளியான, பணம்படைத்த, ஒரு மேல்த்தட்டு மனிதன் மீது நிகழ்வது, ஒற்றை அறையில் ஏர்கூலர்,கட்டில் ,மரியாதை என மிக மென்மையாக அம்மனிதனின் மீது தன்விசாரணையை துவங்குகிறது. முற்பாதியில் வந்த காவல் அமைப்பின் வர்க வேறுபாட்டு அணுகுமுறையை இங்கே விசாரணை எளிமையாக சொல்லி கடக்கிறது. அக்குற்றவாளி அதிகாரங்களுக்கெதிராக பேசிவிடக்கூடாது எனமுனையும் ஒரு சாரரும். எதாவது பேசியே ஆகவேண்டும் அப்போது பணத்தை தேத்திவிடலாம் என முனையும் மற்றொரு சாரரும், சிஸ்டத்தின் பரமபத சூதுக்களை அறியாமல் கடமையாக கண்விழித்து வேலை செய்யும் ஒரு சாரரும் (படத்தில் கோட்டாவில் வந்தவர்களென சுட்டப்படும்), இத்தனை அடுக்குகளின் நடுவில் ஏதுமறியாது எலிகளாக சிக்குண்டு கிடக்கும் ஒரு சாரரும் என ஒரேயொரு காவல் நிலையத்தில் குழுமிக்கிடக்கும் பல்வேறு மனிதர்களை மிகக் கூர்மையாக அடுத்தடுத்த காட்சி நகர்வில் அடுக்குகிறது விசாரணை. அந்த அமைப்பின் அதிகாரிகளுக்கு முழுக்க முழுக்க ஆதாயம் தேடித்தந்த ஒருவனாக இருந்தாலும் கூட அவனை ஜட்டியுடன் அமர்த்தவும். அடித்துக்கொல்லவும் செய்யும் என்ற பொளீர் உண்மைகளையும் பேசுகிறது. 

சமகால சம்பவங்களான ஆடிட்டர் தற்கொலை, ஏ.டி.எம். கொள்ளையர்கள் மீதான என்கவுண்டர். என பல இடங்களில் எந்த சமரசமுமில்லாது சுதந்திரமாக பல உண்மைகளையும் பேசியிருக்கிறது. காவல்துறை படுகொலைகள்,வன்முறைகள், என அரச பயங்கரவாதத்தை பெரும்பாலும் இரவுகளிலும், குறைந்த இருட்டிலும். கருப்பு வெள்ளை காட்சிகளிலும், படமாக்கியிருக்கும் உத்தியானது.. அத்தனை கோரத்தையும் இருண்மையில் வைத்திருக்கும் அந்த வன்முறையமைப்பின் பதிவுகள். காவல்துறை எனும் அமைப்பினில் நுழைந்தபின் ஒரு கொசுக்கடி கூட மரணவலியைத்தரும் தரவல்லது எனும் காட்சியும், இரண்டு துப்பாக்கி ரவைகளின் சத்தத்திற்கு பிறகு திரையில் மூழும் இருளில் நாம் வாழும் நாட்டின், வாழ்க்கையின்,அமைப்பின்,மீதான மொத்த குறுக்குவெட்டுத்தோற்றத்தையும் பரிசீலிக்க இறுதிக்காட்சியில் பார்வையாளர்களுக்கு அளித்த அந்த அரை நொடி அவகாசமும் விசாரணையை தமிழின் முதல் போஸ்ட்மாடர்னிச சினிமாவாக்குகிறது. 

அதிகாரவர்கத்தின் இட்டுக்கட்டிய கதைகளோடு செய்தித்தாள்களில் நாம் கடந்துவந்த காவல்துறை எனும் அமைப்பின் கைது சம்பவங்கள் மற்றும் லாக்கப்/என்கவுண்டர் மரணங்களுக்குப் பின்னிருக்கும் அரசியலை முதல் முறையாக காத்திரமாகவும் அதேசமயம் சுதந்திரமாகவும் திரையில் பேசியிருக்கும் முதல் படைப்பாளி என்பதோடல்லாமல், பொதுவுடமை நாடுகளில் கூட மறுக்கப்படும் எளியவர்களின் மனித உரிமைகளை மீட்டெடுக்க முனையும் சமூக அக்கறைமிகு படைப்பாளியாகவும், எல்லையற்ற அதிகாரங்களோடு அரச கூலிப்படையாக செயல்படும் ஒரு அமைப்பை போஸ்ட்மார்ட்டம் செய்து பொதுப்பார்வைக்கு வைத்து பெரும் கலகக்காரனாகவும். இயக்குனர் வெற்றிமாறன் அவர்களை விசாரணை முன்னிறுத்தியிருக்கிறது. 

இறுதியாக திரையில் வன்முறை அதிகமாக இருக்கிறது என சொல்லப்போகும் பொதுப்புத்திகளுக்கு நிஜத்தில் அந்த அமைப்பின் வன்முறை என்பது விசாரணை திரைப்படைத்தைக்காட்டிலும் மோசமானது. 

Wednesday, February 10, 2016

இறுதிச்சுற்று - செங்கிஸ்கானின் தமிழ்சினிமா

                                                                   

"ஐ" எனும் திரைப்படம் வெளியான சமயம். தமிழ்சினிமாவின் ஆதர்ச நடிகர்களின், இயக்குனர்களின், சினிமாக்களிலும். சமகால இயக்குனர்கள் ஷங்கர்,அமீர், முதல் "சதுரங்கவேட்டை" வினோத், வரையிலானவர்களின் சினிமாக்களிலும், எந்த பிரக்ஞையுமற்று , பொட்டை எனும் வார்த்தையை உலவவிட்டது பற்றியும், திருநங்கைகள் மற்றும் பெண்கள் பற்றிய மதிப்பீடுகள், கேலிச்சித்தரிப்புகளாக தமிழ்சினிமா சூழலில் எவ்வாறெல்லாம் வெகுஇயல்பாக புழங்குகிறது. என்பது பற்றியும் காட்சிப்பிழையில், லிவிங் ஸ்மைல் வித்யா தன் கட்டுரையில் எடுத்தியம்பி வெம்பியிருந்தார். அச்சினிமாக்களில் நேரிடையாக எந்தப்பங்கும் கொள்ளாதவன் என்றபோதும், அவை வெளியான சமயம் அதைக்கண்டு, வாய்மூடி ரசித்துப் பின் மறந்துபோன பார்வையாளன், என்ற ஒரே ஒரு குற்றவுணர்ச்சியே நீண்ட நாட்களாக அரித்துக்கொண்டு இருந்தது. போதாதக்குறைக்கு திரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற குப்பைகள் தொடந்து வெளியாகி, பெரு வெற்றியடைந்த தமிழ்ச்சினிமா சூழலில் அந்தப் பார்வையாள குற்றவுணர்ச்சி இன்னுமின்னும் அழுந்த அரித்தபடி நீண்டு கொண்டிருந்தது. 

பெரும்பாலும் ஆண் இயக்குனர்களால், அவர்களது எண்ணங்களினால், கட்டமைந்த தமிழ்சினிமாவில் வந்த பெரும்பான்மையான திரைப்படங்கள் நாயகனை, அவனது போக்கை, வீரத்தை, காதலை, பறைசாற்றும் படங்களே.. வெகுசில சொற்ப சினிமாக்களே நாயகியை முன்னிறுத்தி வந்திருக்கின்றன. . சமகாலத்தை எடுத்துக் கொண்டோமேயானால் திரையரங்கிற்கு வரும் பெண்கள் சீரியலில் முடங்கிவிட்டதால், தியேட்டர்களை நிரப்பும் இளசுகளை மகிழ்விக்க எடுக்கப்படும், அண்மையத் திரைப்படங்களில் நாயகியின் சினிமா என்பது இன்னும் அகலபாதாளத்தில் சென்றிருக்கிறது. கிட்டத்தட்ட தொலைந்தும் போயிருக்கிறது/போயிருந்தது.

இப்படியான சூழலில் வந்த இறுதிச்சுற்று திரைப்படமும், அதன் மகத்தான வெற்றியும், இதுவரையிருந்த குற்றவுணர்ச்சிகளை நீக்கி, தமிழ் சினிமாவில் மீண்டும் நாயகியின் சினிமாவை மீட்டெடுத்திருக்கிறது. இச் சினிமா ஒருவகையில் விளையாட்டை மையமாக கொண்ட சினிமாவாக இருப்பினும். விளையாட்டில் சாதி,அரசியல், லாபிகளை விமர்சனம் செய்கிற சினிமாவாக இருப்பினும். இறுதிச்சுற்றில் நாம் முன்னிறுத்த வேண்டிய அம்சம் என்னவெனில் நாயகி ஆளுமையை.

இத்தனைக்காலம் கதாநாயகனின் வீரச் சண்டைக்கு, அவன் தெனாவெட்டுக்கு, உக்கிரத்திற்க்கு, மெனக்கெடலுக்கு, ஆர்பரித்து கைத்தட்டல் எழுப்பிய தமிழ்ச்சமூகம் இன்று இறுதிச்சுற்று நிகழும் திரையரங்கங்களில் தலைகீழாக... நாயகிக்கும், அவளது சண்டை, திமிர், உக்கிரம், மெனக்கெடல்களுக்கும், கைத்தட்டலெழுப்புகிறது, ஆர்ப்பரிக்கிறது, என்பது என்னவொரு அற்புதமான காலமாற்றம் மற்றும் முன்னெடுப்பு..? இதே நிகழ்வு, முன்னர் தெலுகு டப்பிங் சினிமாக்களுக்கும் நடந்திருந்தாலும், ஒருவித அன்னியத்தன்மையோடே அவை நிகழ்ந்திருக்கின்றன என்பதும். அச்சினிமாக்கள் நம்பகத்தன்மை இல்லாத கமர்சியல் கதைகள் மட்டுமே, என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் இறுதிச்சுற்று, தீவிர சினிமாவின் வகைமையத் தொட்டு, அதே சமயம் வணிக சினிமாவாகமும் வெற்றி பெற்றிருக்கிறது. வடசென்னை மீனவ நாயகி எனும் எளிய மனிதர்களை முன்னிறுத்தும் கதாபாத்திரப்படைப்பு,  இச்சினிமாவை, தமிழக சூழலோடு அதிகபட்ச நெருக்கம் உடையதாய் மாற்றுகிறது. இந்தக்கதையம்சத்தில் நாயகியின் அம்மாவாக வருபவர் வடஇந்திய முகமாக விலகி நின்றாலும். நாயகியின் தந்தை செளகார்பேட்டை வெள்ளைத்தோலுக்கு ஆசப்பட்டு மோசம்போய்ட்டயேடா எனப்புலம்பும், நகைச்சுவையான வசனத்தை காட்சிப்படுத்திவிட்டதால், இந்தக்கதை நம் மண்ணில் நிகழ்ந்த கலப்புதிருமணமாக பார்வையாளன் மனதில் நிலைத்து நூறுசத தமிழ்க்கள கதையம்சமாகவும் பொருந்திப்போகிறது.

இதே திரைப்படத்தில் இன்னொரு ஆண் கதாபாத்திரத்தின் வழியே நாயக வீரத்தையும்,போர்குணத்தையும்,சேர்த்தேதான் முன்னிறுத்துகிறார்கள்தான் எனக்கொண்டாலும். அதே சமயம், அக்கதாபாத்திரத்திற்கு சற்றும் குறைவில்லாத சமதளத்தில்தான் நாயகியின் கதாபாத்திரமும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. என்பதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம். மென்மேலும் பல்வேறு திறமைகளை கொண்டிருக்கும் பெண் இனத்தின் மீது  வெளிச்சமூட்டி ஊக்கப்படுத்தும் சினிமாகவும் இறுதிச்சுற்று இருக்கிறது என்பதும்.
இப்படி நாயகியின் ஆளுமையை ரசிக்க வைத்து வெற்றியும் அடைந்திருக்கும் இந்த இறுதிச்சுற்று..தமிழ்சினிமாக்களில் முன்னர்வந்த பெண்கள் குறித்த கேலி மதிப்பீடுகள், "பொட்டை" போன்ற வசனங்கள், என எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி பெரும்பான்மை ஆண்கள், ஆணியப்பார்வைகள், குழுமியிருக்கும் ஒரு களத்தில் பெண் இயக்குனர் முன் வைக்கும் மிகமுக்கிய ஆரோக்கிய எதிர்வினையாகவும், கட்டுடைப்பாகவும், மாறியிருக்கிறது. 

அழுத்தமான கதைக்களனும், நம்பத்தகுந்த காட்சியமைப்பும், வசனங்களும், ஒன்று சேர்ந்தால் திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் பாலினம் ஒரு பொருட்டல்ல.. எனும் நம்பிக்கையை, விளைவிக்கும் இத்தகைய சினிமாக்களுக்கு கிடைத்த இந்த பெருவெற்றியானது, அடுத்து ஒரு திருநங்கைகளின் கதாபாத்திரங்களை, மையமாக கொண்ட சினிமாக்களை தோற்றுவிக்கும் சாத்தியத்தை உருவாக்கியிருக்கிறது என்பதும், வருங்கால தமிழ்சினிமாவை ஆரோக்கியப்பாதையில் இழுத்துப்போகும் சக்தியாகவும் இருக்கிறது, என்பதும் இறுதிச்சுற்றை முன்வைத்து நாம் மெச்சிக்கொள்ள வேண்டிய அம்சம்.

மற்ற பேரரசர்களைக்காட்டிலும், தோற்றத்தில் உயரம் குறைந்த,மெலிந்த, உடலமைப்புடையவனாக இருப்பினும், மற்ற பேரரசர்களின் ஆயுதங்களை, நம்பிக்கைகளைச், சிதைத்து பல வெற்றிகளைப்பெற்ற வரலாற்று நாயகன் செங்கிஸ்க்கான் பற்றிய வசனங்கள், இந்தப்படத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இடம்பெறுகிறது. போலவே தமிழ்சினிமா வரலாற்றிலும் நாயகி ஆளுமையை முன்வைக்கும் இப்படம், ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் இருக்கப்போகிறது. 

ஏனெனில் இது ஒரு பெண் செங்கிஸ்கானின் தமிழ் சினிமா.