Wednesday, October 29, 2014

வெளிவராத கவிதைகள் - 2

ஞானஸ்நானம் 

சவுதாமினியின் அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் நேத்து 
பெரிய சண்டையாம் 
ஹோம்வொர்க் செய்யலன்னு 
டீச்சர் திட்டினதுக்கு 
அப்படி சொல்லிட்டு அழுதா 
ப்ளீஸ்பா நானும் ஹோம்வொர்க் 
செய்யும்போது மட்டும் 
நீங்க சண்டைபோடாதீங்க 
என கைகளுக்குள் புகுந்து 
தாடையை தடவி
அவள் சொல்லி 
முடித்தபோது ஆட்டுக்குட்டியின் 
கைகளில் கர்த்தராகியிருந்தேன் !! 

வருத்தங்களுக்குஅப்பால்

ஆடித்தள்ளுபடிகளில் கூட 
உடை வாங்கித்தராதவனென்று 
அட்சயதிருதியைகளில் கூட
நகை வாங்கித்தராதவனென்று 
பண்டிகைநாட்களில் கூட 
பொருள் வாங்கித்தராதவனென்று 
சம்பளதினங்களில் கூட 
இனிப்பு வாங்கித்தராதவனென்று 
மூகூர்த்ததினங்களில் கூட
பூக்கள் வாங்கித்தரதாவனென்று
அவளுக்கிருக்கும் ஏகவருத்தங்களுக்கு
அப்பால் சிறு தலைவலிக்கு 
பதறியடித்து தைலமொன்றை
தடவிவிடும் பேரன்பும் இருக்கிறது !!

முத்தக்கதை 

கூட்டுக்குள் அலகுகள் மோதும் 
குருவி முத்தம்
இலைகளை சினுங்க வைக்கும்
காற்றின் முத்தம்
மூச்சைப்போல் கரையை தீண்டும்
அலை முத்தம்
மோகம்தீர மேகத்தில் புகும்
நிலவு முத்தம்
பூக்களுக்குள் எப்போதும் தீராத 
தேனீ முத்தம்
புல்வெளியில் ஊர்ந்து தீர்க்கும்
பாம்பு முத்தம் 
தண்டவாளங்களில் நீண்டபடி இருக்கும்
ரயில் முத்தம் 
என மேலதிக முத்தங்கள் 
தீர்ந்த பிறகும் 
உனக்காய் எப்போதும் மிச்சமிருக்கும்
ஒரு கொசுறு முத்தம் !!
---------------------------------------------------------------------------------------------------------------------------

வெளிவராத கவிதைகள் - 1

மழை பற்றி மேலும் ஒரு கவிதை

எல்லா மண்ணிலும்
மழையை பற்றிய ஒரு
வாசனை உண்டு 

எல்லா கவிஞர்களிடமும் 
மழையை பற்றிய ஒரு 
கவிதை உண்டு 

எல்லா மழையிலும் ஊரின்
வாசனை இல்லை 

எல்லா மழையும் கவிதை இல்லை !!

காலச்சக்கரம்

இன்றை நேற்றாக
நேற்றை நாளையாக
வைத்திருக்கும் குழந்தைகளிடம் நாளை நாளையாக விரும்புவதில்லை !!

சிலுவைப்பாடு

விருப்பமில்லாத
களத்தில் இருப்புகொள்ளும் ஒவ்வொரு கணமும் புரிகிறது சிலுவைப்பாடு !

நான் இல்லாத நான்


புன்முறுவல்கள்
கைகுலுக்குதல்கள்
கட்டிப்பிடித்தல்கள்
பாராட்டுதல்கள்
பேச்சுவார்த்தைகள்
கைதட்டல்கள்
மட்டுமின்றி
தாழிடப்பட்ட இந்த 
அறைகளுக்குள்ளும்
இல்லை நானும் 
என் இந்த கவிதையும் !! 

 

Wednesday, October 22, 2014

கத்தி (2014) - மாற்று கமர்சியல் சினிமா


கொஞ்சம் சென்ஸிடிவ்வான பிரச்சினைகளை கையாளும் விதத்தை அடிப்படையாகக் கொண்ட புத்திசாலித்தனமான திரைக்கதைகள் சொல்லிஅடிக்கும் கில்லியாக ஹிட்டாகி வருவது நம் தமிழ்சினிமாவின் வரலாறு...

ரசிகனை பெரியதாக லாஜிக் பார்க்க விடாமல் கலகலவென இருக்க வைத்து கொஞ்சமாய் உள்ளூர உசுப்பேத்தி சமூக பிரச்சினைகளை பொதுப்புத்தி அனுகுதல்களில் இருந்து விலகி சற்றே மாறுபட்டு புத்திசாலித்தனமாக கையாளும் ஹீரோவை  மையப்படுத்தி கொணாடாட வைக்கும் படமே கத்தி..

எங்க  வீட்டுப்பிள்ளை, ராஜாதி ராஜா போன்ற வழக்கமான காண் ஒற்றுமை நாயகர்களை கொண்ட, வழக்கமான ஆள் மாறாட்ட  கதைதான்,  என்பதை பற்றிய யோசனை எல்லாம் சாவகாசமாக தியேட்டரை விட்டு வீட்டுக்கு வந்தவுடன் மட்டுமே தோன்றுமாறு இருக்க வைத்தது தான் இங்கே முருகதாஸின் மேஜிக் ..

கலை சினிமாவை கமர்சியல் சினிமாவாக்கும் கலை  முருகதாஸை போன்ற சிலருக்கே சொந்தமானது, மெமண்டோவை ஆகச்சிறந்த கமர்சியல் கஜினியாக்கி இந்தியாவை திக்குமுக்காட வைத்தவர்,  இதிலும் அதே பானிதான்.. சில ஆண்டுகளுக்கு முன் ஹிந்தியில் வெளியான  பீப்லிலைவ் என்றோரு நகச்சுவை கலந்த கலை சினிமாவை சுட சுட மசாலா கலந்து கமர்சியல் சினிமாவாக்கி விருந்தே படைத்திருக்கிறார் முருகதாஸ்..

இரண்டு படங்களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்ட கதைகள், இரண்டிலும் மீடியாக்களின் டிஆர்பி பசியை துகிலுரித்திருக்கிறார்கள், இப்படி சமூக பிரச்சினைகளை கமர்சியல் சினிமாவில் எவ்வளவு உணர்ச்சிகரமாக சொன்னாலும் தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் மறந்துபோகும் அதுதான் அதன் ஒரே சாபக்கேடு.. 
இருக்கட்டும் தமிழ்சினிமாவின் அஞ்சான் போன்ற அரைத்த மாவு கமர்சியல் சினிமாக்களில் இருந்து வேறுபட்டு  டெக்னிக்கலாக மிரளச்செய்த இந்த கத்தியை இப்போதைக்கு வரவேற்போம் இனி கமர்சியல் சினிமாவின் தரம் இதன் மூலம் மாறும் என்ற நம்பிக்கையோடு..

விஜய்க்கு வருவோம் சமகாலத்தில் எந்த ஒரு நடிகருக்கும் அரசியல் ரீதியாக இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது வெளிப்படையான கருத்துக்கள் எதுவும் அவர் சொல்வதில்லை என்ற போதும் அவரை கொண்டாடும் மக்களின் பொருட்டு சற்றே கலவரமாகும் அரசியல் தலைகளின் வெளிப்பாடு அவரை இந்த பாடு படுத்துகிறது.. இருந்தும் ஆயிரமாயிரம் பிரச்சினைகள் அவரை சூழ்ந்து கொண்டாலும் அவரின் ஆன் ஸ்கீரின் எனர்ஜி என்பது வேற லெவல்.. அந்த லெவலின் எல்லை வரை கூட்டிச்சென்ற சில படங்கள் எல்லாமே அவரின் மாஸ் ஹிட்டுகளாக அமைந்திருக்கின்றன அதே கதைதான் கத்தியிலும் , கில்லி,போக்கிரி,துப்பாக்கி வரிசையில் கலந்துகட்டி அடிக்கும் விஜய் எனர்ஜி சினிமாவே இந்த கத்தி..

பொதுவாக நல்ல மாஸ் நடிகனுக்கு அந்த துறு துறு எனர்ஜி மிக அவசியம் அதில் எந்த குறையும் அவர் எந்த படத்துக்கும் வெளிக்காட்டாமல் இருந்ததில்லை சமயங்களில் கைகூடாமல் போன லாஜிக் இல்லாத திரைக்கதைகளில் அந்த எனர்ஜி இருந்தும் வீனாகிப்போன பல சினிமாக்கள் 
உண்டு, போகட்டும் எல்லாம் கைகூடிய இந்த திரைக்கதையில் அந்த எனர்ஜி ரசிகனை தொற்றிக்கொண்டு ஒரு ஜகஜால 10000 வாலா பட்டாசாக வெடித்து தள்ளியிருக்கிறது என்பதே மறுக்க முடியாத நிஜம்...

ஜீவானந்தம் - மென்சோகம் இழைந்தோடும் விவசாயிகளின் பங்காளன்,
கதிரேசன் - துறு துறு கிரிமினல் இளைஞன் என இரண்டு விஜய்கள்,
விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதர பிரச்சினை,
கார்ப்ரேட் கம்பெனி CEO வின் சுயநலம், மீடியாக்களின் மீதான சவுக்கடி, இவற்றை சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையை மல்டிப்பிளக்ஸ் ரசிகன் முதல் டெண்டுகொட்டாய் ரசிகன் வரை விசிலடித்து கைதட்டி கொண்டாடும் ட்ரீட்மெண்டில் வந்திருக்கும் படமே கத்தி

விஜய் எனர்ஜி + முருகதாஸின் புத்திசாலித்தனம் + அனிருத்தின் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான மேஜிக்கல் மியூசிக் கலந்த கம்ப்ளிட் ஹிட் பேக்கேஜ்தான் இந்த கத்தி.. 

தமிழ்சினிமாவின்  பாக்ஸ் ஆபிஸ் ஹிட் போட்டியில் கத்திக்கென ஸ்பெஷலாக ஒரு சிம்மாசனம் காத்திருக்கிறது..

வாழ்த்துக்கள் கத்தி & டீம் 

தோழமையுடன்
கர்ணாசக்தி.


Tuesday, October 21, 2014

பன்றி (Fandry) - கடைசாதி மக்களின் நிலைக்கண்ணாடி



யார் சார் இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க..எல்லாரும் அன்பாதானே இருக்கோம்..அத பத்தி பேச என்ன இருக்கு? என்றும் இடஒதுக்கீடு என்பதெல்லாம் சமூகநீதி அல்ல அது ஒரு மகாபாவம் என சித்தரித்தும்.. தப்பித்தவறி வேறு யாரேனும் தலித்தியல் குறித்து பேசினாலும் அதையும் தலித்திய சாதி வெறியாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் இன்றைய சமகால முற்போக்குவாதிகளே உங்களின் முகத்தில் அறைந்து உண்மையை எடுத்து சொல்ல எந்த திராணியும் இல்லாது தலித்திய பெருஞ்சோக வாழ்வை கலை வழியே காட்டி வெளிச்சம் பரப்பும் சிறு முயற்சியே இந்த பன்றி

இந்த திரைப்படம் உங்களிடம் எந்த அரசியலையும் பேசவில்லை.. மிக மிக யாதர்த்தமான ஒரு சிறுவனின் உலகத்தையே அது பேசுகிறது… உங்கள் அன்பு சூழ்ந்த உலகம் உண்மையில் எப்படி இருக்கிறது என்றே பேசுகிறது.. இதன் நாயகன் உங்கள் பதின்ம வயதைப்போலவே இரட்டைவால்குருவி, நவநாகரிக உடை, காதல், இவைகளின் மீதே மோகம் கொண்டவனாக இருக்கிறான் அவனின் பெயர் ஜாப்யா.. அவனுக்கு அந்த ஊரின் உயர்சாதி பெண் ஷாலுவின் மீது ஒருதலைக்காதல் இருக்கிறது அந்த காதலின் பொருட்டு அவனுக்கு குறுக்காக சில பன்றிகளும் உங்கள் பார்வையில் அன்பு காட்டும் வர்கம் என்று நீங்கள் சொல்லிக்கொள்ளும் உயர்நிலை,இடைநிலை சாதி மக்களின் வன்மம் மட்டுமே பெரும் சகதியாக நிற்கிறது 

அந்த சகதியை அவன் மீதும் அந்த பன்றிகளை மேய்க்கும் அவன் குடும்பத்தின் மீதும் எப்போதும் அந்த ஆதிக்க வர்கம் வாரி இறைக்கிறது எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கிராமம் அவனையும் ஒரு பன்றியாகவே பார்க்கிறது..

காதலுக்கு முன்னால் எந்த சகதியும் பொருட்டல்ல என்றவாறு ரெட்டைஜடை மற்றும் ரெட்டைவால் குருவிகளின் பின்னால் கவிதையாய் திரிபவனை பிடித்து இழுத்து வந்து ஊர் நடுவில் நிற்க வைத்து உங்கள் சமூகம் அந்த சகதியை நக்கச்சொல்கிறது.. அதுவும் அவனின் மானசீக காதலி பார்த்துக்கொண்டிருக்கும் போதே.. 

அவனும் எந்த அரசியலையும் பேசாமல் உடைந்து உருகி சகதியை நக்கி உங்கள் வன்மங்களுக்கு இரையாகிறான்.. தன்நிலைமை குறித்தும் சமூக பொருளாதார இருப்பை குறித்தும் எந்த காதலியின் முன்னால் காட்டக்கூடாது என்று ஓடி ஓளிந்து காதல் வளர்த்து திரிந்தானோ அதே காதலியின் முன்னால் நக்கிய உங்கள் சகதியை சுமந்து திரும்புவனிடம் உங்கள் ஆதிக்கசீண்டல்கள் இன்னும் அதிகமாக தொடர காதலியே இல்லை என்றான பிறகு அவன் எதிர்வினையாற்றுகிறான் வெடித்து அழுது அப்படி அவன் நிகழ்த்துகிற அந்த எதிர்வினையானது இந்திய சமூகத்தின் முகத்தை எப்படி பதம் பார்க்கிறது என்பதை உள்ளம் உருக பேசும் படமே பன்றி

படத்தில் ஜாப்யாவையும் அவனின் குடும்பத்தையும் போலவே எந்த அரசியலையும் வெளிப்படையாக பேசாது அம்பேத்கர் , பூலே போன்றவர்கள் சுவர் ஓவியமாக அமைதியாக இயல்பாக காட்சிகளில் கடக்கின்றனர்.. அந்த இயல்பான வாழ்கை கடத்தலினூடே படம் அமைதியாக பேசும் யாதார்த்தத்தின் அரசியலானது லட்சம் சாட்டைகளுக்கு சமம் மனசாட்சி என்ற வஸ்துவோடு இத்திரைப்படத்தை நீங்கள் பார்த்தால் அந்த சாட்டைகள் உங்களை நிர்வானமாக்கி தோலுரிக்கும் வலியை தரக்கூடியது 

படத்தில் ஒரே ஒரு பாடலாக வரும் ”ஜனகனமன “ தேசியகீதம் ஒலிக்கும் காட்சியமைப்பிற்கும் அதனூடே எழும்புகிற கேள்விகளுக்கும் உங்களால் எங்கிருந்தும் ஒரு பதிலை கண்டுபிடித்து கொண்டு வந்து விட முடியாது.. பாரம்பரிய இந்திய சினிமாவில் கட்டுடைத்தலை ஆணித்தரமாக நிறுவிய படத்தின் இயக்குனர் நாக்ராஜ் மஞ்சுலே வரலாற்று சிறப்பு மிக்க படைப்பாளி என்பதை அவர் வடித்த இந்த செல்லுலாய்ட் கவிதை காலம் முழுக்க உணர்த்திக்கொண்டே இருக்கும்.. தலித் சமூகத்தை சார்ந்த இவர் ஒரு கவிஞரும் ஆவார்.. அவரின் கிராமம் மற்றும் பதின்ம வயது அனுபவங்களே இந்த திரைப்படம்

எந்த புனைவுமில்லாது சமகால தலித்திய வாழ்வை அப்பட்டமாக உரக்கச்சொன்ன இந்த பன்றி படத்து ஜாப்யா வைப்போலவே பள்ளியை, கல்லூரியை, காதலை, இருப்பை, கடந்த, கடந்து கொண்டிருக்கும் இனி கடக்க போகும் ஒரு சமூகம் குறித்த உங்கள் பார்வையை தயவு செய்து இந்த படத்தை பார்த்த பிறகேனும் மாற்றிக்கொள்வீர்கள் என சிறிதாக நம்புகிறேன்

ஆகவே நாடெங்கும் மனிதர்களின் மீது அன்புதான் வியாபித்திருக்கிறது என நம்பி அன்பை பரப்பிக்கொண்டிருக்கும் ஜீன்ஸ் அனிந்த இயேசுபிரான்களே.. இடஒதுக்கீடு மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை குறித்த உங்கள் முற்போக்கு சித்தாந்தங்களை ஒருமுறையேனும் இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு மாநிலம் தேசம் உலகம் என எல்லாவற்றையும் கடந்து பரப்புங்கள்..

நன்றி

தோழமையுடன்

கர்ணா சக்தி


( இந்த மாபெரும் காவியத்தை காண பரிந்துரைத்த http://yalisai.blogspot.in/  லேகா ராமசுப்ரமணியன் அவர்களுக்கு ஆயுள் முழுமைக்குமான கோடி நன்றிகள் J )

Monday, October 6, 2014

நெப்ராஸ்கா ( NEBRASKA -2013 ) ” அப்பாக்களை நினைவுறுத்தும் ஒரு கவிதை ”




வூடி – 75 வயதுகளுக்குள் இருப்பவர்.. டிமென்சியா என்ற நோயால் பீடிக்கப்பட்டவர் அந்த வயதுக்கே உரிய ஞாபக மறதிகளையும் கொண்டவர்.இவருக்கு கேட்டி என்ற மனைவியும் ரோஸ் டேவிட் என இரண்டு மகன்களும் உள்ளனர்..

வூடிக்கு அவர் வசிக்கும் மாகாணத்திலிருந்து சுமார் 900 கி.மீ கொண்ட நெப்ராஸ்கா நகரத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தை சேர்ந்த லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்ததாக நம்புகிறார் ஆனால் அவரை தவிர எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது அந்த லாட்டரி ஒரு கண் துடைப்பிற்காக நடத்தப்படுகிறது எனவும் உண்மையில் அவருக்கு எந்த பரிசுத்தொகையும் விழவில்லை என்பதும் ஆனால் வூடிக்கு உள்ள மனக்குறைபாடால் அவர் அந்த பரிசுத் தொகை விழுந்ததாகவே நம்புகிறார் அதை மற்றவர்கள் யாரும் நம்பாததால் தானே சென்று அடைவதற்காக சில முறை முயற்சியும் செய்கிறார்.. அவரின் ஓயாத இந்த ஆர்வத்தால் சற்றே கலவரமடையும் அவரது மகன் தான் அழைத்துப்போவாதாக சொல்லி அவரை நெபரஸ்காவிற்கு அழைத்துப்போகிறார் இவர்களுக்கிடையேயான அன்பால் நிகழும் பயணமே நெபரஸ்கா

பொதுவாக அப்பாக்களில் ஒரு மகனை பார்க்கும் தருணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை அப்படி குழந்தையாக மாறிப்போன ஒரு அப்பாவும் அப்பாவாக மாறிப்போகும் ஒரு மகனுமாக மிகச்சிறந்த கவிதையொன்றை கருப்பு வெள்ளை பிரேம்களில் வாசித்த நெகிழ்வு படம் முழுக்க கிடைக்கிறது

முக்கியமாக வூடியின் சொந்த ஊரில் சில காலம் தங்கியிருக்கும் போது அப்பாவை பற்றி சிலரிடம் தெரிந்து கொள்ளும் போதும் அப்பாவின் சிறுவயது மன நிலையை ஜீவனுடன் கடந்திருக்கிறார் அவரின் மகனாக நடித்தவர்

வூடி- எல்லா அப்பாக்களின் சாயல்களும் அள்ளித் தெளிக்கும் அற்புதமான படைப்பு
இறுதியாக பரிசு விழவில்லையென்று தெரிந்த பின்னும் ஆறுதல் பரிசாக வெள்ளைத்தொப்பியை வாங்கிக்கொண்டு நடக்கும் போதும் அத்தனை வயதுகளிலும் ஒரு குழந்தையை நினைவூட்டுகிறார்.. மகனிடம் இயலாமைகளில் தோய்ந்து அழுதபடி ஒரு பிக்அப் டிரக் வாங்குவதும் தொலைந்துபோன தனது கம்பரசர் வாங்குவதும் பற்றிய ஆசையை வெளிப்படுத்தும்போதும் கடைசியில் ஆசை நிறைவேறிய பூரிப்பில் தனது சொந்த ஊர் மக்களின் முன் பெருமையாக தனது டிரக்கை ஓட்டிக்காட்டும் போதும்.. கண்களில் நீர் பெருக அப்பாக்கள் எனும் பிம்பத்தை நிரம்ப விடுகிறார்.

மென்மையாக, காற்றில் மிதக்கும் ஒரு சிறகைப்போல எந்த வித உறுத்தல்களும் இல்லாது மிருதுவாக கட்டமைக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் படத்தை முதன் முதலாக பார்த்த ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம் படம் நிறைவடையும் போது கிடைக்கிறது

அப்பாக்களை பற்றிய மிக பிடித்தமான ஒரு கவிதை வாசித்த அனுபவம் வேண்டுமா நெப்ரஸ்கா பாருங்கள்

Thursday, October 2, 2014

மெட்ராஸ் - இதுவரை தீண்டப்படாத வசந்தம்




ஆண்டாண்டு காலமாக கும்பிடறேன் ஆண்ட... சரிங்க ஆண்டேன்னு சொல்லவும் பண்ணக்காரர்களை நாட்டாமைகளை கும்பிடுகிற இடுப்பில் துண்டை கட்டிக்கொள்கிற தரையில் உட்கார வைக்கிற துணை நடிகர்களாக மட்டுமே காட்டப்பட்டு வந்த ஒரு சமூகத்தின் அச்சு அசல் சமகால வாழ்விய பதிவுதான் மெட்ராஸ்...என்பதையும் மீறி இது உண்மையான சென்னையை பற்றிய பதிவு

சென்னை என்றால் வானுயர்ந்த கட்டிடங்களும் அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் நடுத்தர மக்களை கொண்ட தென் சென்னை அல்ல.. ஓங்கி வளர்ந்த எல்லா கட்டிடங்களையும் தன் இரத்தத்தையும் வியர்வையையும் தந்து கட்டித்தந்துவிட்டு குடிசைகளிலும் ஹவுசிங்போர்டுகளிலும் வாழும் வட சென்னை மக்களே அசல் சென்னையின் சொந்த குடிகள் அவர்கள்தான் உண்மையான சென்னையின் அடையாளங்கள் இதுவரை தமிழ்சினிமாவில் தீண்டப்படாமல் இருந்த களம் மனிதர்கள் அவர்களின் வாழ்வியலே இந்த மெட்ராஸ்

சின்னபொறியை வைத்து எழுப்பப்படுகிற பெருந்தீயை போலவே.. சின்னதான ஒரு சுவரை அடிப்படையாக வைத்து எழுப்பப்படுகிற சமூக அரசியல் பெருந்தீயே இந்த படம், நிச்சயமாக ஒரு கலகக்காரனின் படம்..

காலம் காலமாக வெறும் ஓட்டுகளாக மட்டுமே கருதப்படும் மக்களுக்கு தேவையான அரசியலை பேசும் படம்.. இனி அவர்களை பயன்படுத்த துடிக்கும் அரசியல் சக்திகளை எப்படி கையாள வேண்டும் என்பதை சொல்லித்தரும் படம்..

தமிழ் தமிழ்னு ஒன்னாத்தான் நிப்பான் ஆனா சாதின்னு வந்துட்டா உடனே கத்திய தூக்கிருவான் என்ற வசனங்களின் மூலம் இன்னமும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதிக்க மனப்போக்கை தர்மபுரி கலவரங்களை காடு வெட்டிகளை கண் முன் நிறுத்தும் பதிவு

இதெல்லாம் மீறி ஜனரஞ்சக சினிமாவின் எல்லா யுக்திகளுமே நிறைந்த கலை சினிமா என்பதுதான் இந்த படத்தின் சிறப்பம்சம்

காளி,அன்பு,ஜானி,மாரி,கலை, என எல்லா பாத்திரங்களுமே மிக சாதரணமாக ஒரு அசல் வாழ்வை நமக்குள் கடத்தும் அற்புத கதாபாத்திரங்கள் எல்லோருமே ஒரு இன மக்களின் பெரு வாழ்வை வாழ்ந்துதான் காட்டியிருக்கிறார்கள் குறிப்பாக அன்பு, ஜானி, அற்புதம் செய்திருக்கிறார்கள்

காட்சியியலின் ஒவ்வொரு படிமத்துக்கும் நிகழ்வுக்கும் ஏற்றபடி முரளியின் காமிரா நிகழ்த்தியிருக்கும் சாகஸம் பிரம்மிக்கத்தக்கது குறிப்பாக ஒவ்வொரு லாங்ஷாட்டின் போதும் காண்பிக்கப்படுகிற சுவர் நமக்குள் ஒரு கலவரத்தை, பீதியை,குரூரத்தை, எதிர்பார்ப்பை, நிகழ்த்தி விடுமாறு காட்டிய லாவகம் மிக அற்புதம்

இடைவேளை தொடக்கத்திலிருந்து இறுதிவரை சந்தோஷ் நாரயனனின் இசைதான் நிகழவிருக்கிற அதகளத்தின் மொத்த பெரும் சாட்சி.. மனிதர் பின்னனியை பின்னி பெடலெடுத்திருக்கிறார்

எல்லாப்புகழும் இயக்குனருக்கே தோழர் பா.இரஞ்சித்தின் கனவு ஒரு தனிமனிதனின் கனவு அல்ல ஒரு நீண்ட சோக வரலாறு கொண்ட ஒரு சமூகத்தின் கனவு 


இனி நிகழவிருக்கும் அல்லது நிகழ வேண்டிய கட்டாயத்தின் கனவு.. இலக்கியம் தவிர இதுவரையில் சினிமாக்களில் தீண்டப்படாத தலித்திய வாழ்வியல் பதிவை முதல் பதிவாகவும் இதைவிட சிறப்பானதொரு முழுமுதல் பதிவு இல்லை எனும்படியாகவும் நூறாண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அழுத்தமாக பதிய வைத்த கை தோழர். பா.இரஞ்சித்தின் கை.. அந்த கைகளுக்கு ஆயிரமாயிரம் அன்பு முத்தங்கள்..

தோழமையுடன்
-கர்ணா சக்தி