Friday, March 4, 2016

கிழக்கு பதிப்பகமும் அதன் உண்மை முகமும்



சேகுவேரா,மாவோ, போன்ற பெரும் போராளிகளின் வாழ்கையை எழுதி விற்று பிரபலமாகிய கிழக்குப்பதிப்பகமும் அதன் உரிமையாளரும் மத்தியில் தங்களுடைய பூர்விக அடையாளத்தின் கை ஓங்கியதும் தங்களது கம்யூனிச முகமூடியைக் கிழித்துக்கொண்டு, தங்களின் உண்மைமுகமான இந்துத்துவ முகத்தோடு வலம் வருவதை இப்போது நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். 
முற்போக்கு கம்யூனிச போர்வையில் பிரபலமாகிய இவர்களின் உண்மையான அஜெண்டா என்பது இந்து மதத்தை தமிழகத்தில் அறுதிப் பெரும்பான்மை மனங்களில் வார்த்தெடுப்பது மட்டுமேயாகும்.இந்த மொன்னை நோக்கத்திற்கு எதிராக இவர்களுக்கு பெரும் தலைவலி அளிக்கக் கூடிய இரண்டே தலைவர்களாக
இந்திய அளவில் அம்பேத்கரும், தமிழக அளவில் பெரியாரும், இருப்பதை ஜீரணிக்க முடியாமல் தங்களது கேவலமான சித்து வேலைகளை கிழக்கு பதிப்பகத்திற்கு கிடைத்த அடிமைகளைக் கொண்டு நிறுவ முயல்கிறார்கள். இந்துமத அநீதிகளைப் பொறுக்காது பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே பிற மதத்தை தழுவுகிறார்கள். இந்தப்போக்கிற்கு எதிராக இந்துமதத்தில் இல்லாத புனிதத்தன்மையை இருப்பதாக கூறி அம்மக்களை திரும்ப அழைக்க அவர்களுக்கு தேவைப்படும் காரணம்தான் சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட மூன்று புத்தகங்கள்.

இந்துத்துவ அம்பேத்கர்.
அம்ப்பேத்கர் புத்தமதத்தை தழுவியது ஏன்?
தலித்துகளுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி.

தான் இறக்கும்போது ஒருபோதும் இந்த கேடுகெட்ட மதத்தை சார்ந்தவனாக இருக்க மாட்டேன் என்று இந்து மதத்தை துப்பித்தூர வீசிவிட்டு புத்த மார்கத்தை தழுவியவரை மீண்டும் இந்துத்துவ அம்பேத்கராக்குவதன் மூலம். பிற மதத்தை தழுவிய ஒடுக்கப்பட்ட மக்களை திரும்பப் பெறும் கேடுகெட்ட சிந்தனையும், சுயமரியாதை இயக்கங்கள் தலித்துகளுக்கு பாடுபடாமல் இடைசாதிகளுக்கு மட்டும்தான் பாடுபட்டது என்பதை நிறுவுவதன் மூலமும் இவர்களது தெள்ளத்தெளிவான ஒரே குறிக்கோள் என்னவெனில் மதமாற்றங்களை தடை செய்து.. பிற மதத்தாரை இந்து மதத்திற்கு இழுத்து வருவது மட்டுமே. இதே அரசியல் காவிகள் வெளிப்படையாக தாய்மதத்திற்கு திரும்புங்கள் என வெட்கமின்றி அழைத்த அதே குயுக்திதான் பத்ரி,வெங்கடேசன் போன்ற இண்டலெக்சுவகள் மூலம் புத்தகங்களாக பரிணாமம் எடுத்து பல்லைக்காட்டுகின்றன.

த்தூவென புறக்கணிப்போம்.