கோணங்கள்
அமைப்பின் சார்பாக நடந்து வரும் உலக சினிமா திரையிடலில், கடந்த ஞாயிறன்று பார்த்த Like Father, Like Son (2013) திரைப்படத்தை பற்றி,
அந்திக்கருக்கலில்
இந்தத்திசை
தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை தெரியவில்லை.
- - கலாப்ரியா
கலாப்ரியாவின் இந்த ஒற்றைக்கவிதை நம் மனதுக்குள் ஏற்படுத்தும் அத்தனை உணர்ச்சிக்குவியல்களையும்,
மனிதப்பறவைகளின் வாழ்வியலில் பொருத்தி காட்சிகளின் அடுக்குகளில் பாசம் எனும் பாஷையை
இரத்தமும்,சதையுமாக, நமக்குள் கடத்திவிடுவதோடு மனித இனத்தின் உன்னத அன்பை பறைசாற்றும்
ஜப்பானிய தேசத்தின் அற்புத திரைப்படமே இந்த லைக் பாதர் லைக் சன்,
ஜப்பானின் எதோ ஒரு நகரில், வெற்றி பெற்ற பொறியாளனும், காலத்தின்
பொருத்தபாட்டுடன் ஒத்திசைந்து பணம் திரட்டும் வழியில் செயல் படுபவனும், உயர்தர நாகரிகம்
கொண்ட ஒரு பணக்கார தந்தைக்கு மனைவியும், “கெய்தா” எனும் அழகிய ஆறு வயது மகனும் உள்ள
குடும்பம் இருக்கிறது, ”கெய்தா”விற்கு அவனின் பணக்கார தந்தை அவனுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை
என்கிற மனவருத்தம் உண்டு, மேலும் அக்குடும்பம் குட்மார்னிங், வெல்கம் ஹோம், பியானோ
கிளாஸ், போன்ற உயர்தர குடும்பங்களின் சம்பிரதாய கட்டமைப்புடன் வாழ்ந்து வருகிறது.
அதே நகரில் ஒரு சிறிய கடை வைத்திருப்பரும் நடுத்தர குடும்பத்தை
நடத்தி வருபவருமான ஒருவருக்கு மூன்று குழந்தைகள் மற்றும் நிர்வாக திறமை வாய்ந்த மனைவியும்
இருக்கிறார்கள், இவர்களின் 6 வயது மகனின் பெயர் ”ரூயிஸி” அக்கறை நிறைந்த அன்பை வெளிப்படுத்துவதும்,
குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடவும் எந்நேரமும் மகிழ்ச்சியில் திளைக்கும் மிக அழகான
குடும்பம் இவர்களுடையது.
”கெய்தா” வை பள்ளியில்
சேர்த்த சில மாதங்களுக்கு பின்னர், அவன் பிறந்த மருத்துவமனையிலிருந்து ஒரு அவசர அழைப்பு
உயர்தர குடும்ப தந்தைக்கு வருகிறது, அதன் பொருட்டு விசாரிக்க சென்ற அவர்களுக்கு மருத்துவமனை
6 வருடங்களுக்கு முன்னர் அங்கு பிறந்த இரண்டு குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து இடம்
மாறிவிட்டதாகவும், தீவிர விசாரனை மேற்கொண்டதில்
”கெய்தா” அவர்களின் மகன் இல்லையென்றும் பேரதிர்ச்சியை அளிக்கிறது. சில நாட்கள் கழித்து,
மருத்துவமனை நடத்திய மரபனு பரிசோதனைகளின் முடிவில், அதே நகரை சேர்ந்த ஒரு நடுத்தரவசதி
கொண்ட குடும்பத்தில் வாழும் “ரூயிஸி” தான் அவர்களின் மகன் எனவும் ”கெய்தா” அந்த நடுத்தர
குடும்பத்தின் மகன் எனவும் தெரிவிக்கிறது, மேலும் இரண்டு குடும்பங்களையும் சந்தித்து
பேசவும் வைக்கிறது,
நடந்துவிட்ட இந்த சிக்கல் குறித்து அவ்விரு குடும்பங்களும் விவாதித்து
ஒரு நாள் மட்டும் அவ்விரு சிறுவர்களையும் இடம் மாற்றிப்பார்க்கலாம் என முடிவு செய்து,
தத்தமது குழந்தைகளை இடம் மாற்றிப்பார்க்கிறது, இரு குடும்பங்களும் பொது இடங்களில் சந்தித்து
பேசி மேலும் இது குறித்து விவாதித்து ஒரு நாள் மொத்தமாக இரு குழந்தைகளையும் இடம் மாற்றி
விடுகிறார்கள், இதற்கு பிறகு இரண்டு தந்தைகளுக்குள்ளும், தாய்களுக்குள்ளும், குழந்தைகளுக்குள்ளும்
நீள்கிற வெம்மையை ஒவ்வொரு காட்சியும் கவித்துமாக நம்முள் கடத்துகிற சுவாரஸ்யத்தினை
இந்த திரைக்காவியத்தை தரிசித்தால் மட்டுமே கிட்டும்.
இந்த படத்தின் தாய்,தந்தை,குழந்தை, என ஒவ்வொருவரும் பேசுகிற
வசனங்கள் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
உதாரணமாக குழந்தைகள் இடம் மாறப்போகும் அந்த நாளில், அந்த இரு
தந்தைகளும் பேசிக்கொள்ளும் வசனம்.
“பட்டம் விடுவது என்பது மிக மகிழ்ச்சிகரமான விளையாட்டு, இப்போதெல்லாம்
பட்டங்கள் தானாகவே பறக்கிறது, பட்டம் செய்ய பேப்பரை மடித்து ஒரு வாலை ஒட்டவைத்து அதை
காற்றில் பறக்க விடுவதென்பது அலாதியான இன்பம்,
”ரூயிஸை” உங்கள் வீட்டுக்கு அழைத்து போனதும் அவனுக்கு
வாரத்திற்கு ஒரு முறையேனும் பட்டம் விட சொல்லிக்கொடு, அவனுக்கு பட்டம் விடுவது என்றால்
மிக பிடிக்கும்”
“என் தந்தை எனக்கு பட்டம் விட சொல்லித்தந்த தந்தையாக இருந்ததே
இல்லை”
“ம்ம் உன் சூழ்நிலை எனக்கு புரிகிறது, உன்னையும் உன் தந்தைபோலவேதான்
உன் குழந்தையிடம் செயல்பட வேண்டும் என எதுவும் நிர்பந்திப்பது இல்லையே ?”
நீரோடையின் முன்பாக படமாக்கப்பட்டிருக்கும் இந்த காட்சியும்,
அதை தொடர்ந்து அவர்கள் மொத்த குடும்பமும் எடுத்துக்கொள்ளும் ஒரு புகைப்படமும், மொத்த
கதையின் ஒரு அழகான குறியீடு.
வளர்த்த மகனின் இருப்பை பிரிந்த தாய்மையின் குரலாக ஒலிக்கும்
மற்றொறு வசனம்
”மகன் என்பவன் ஒரே இரத்தம் என்றால் மட்டுமே மகனாகிறான்”
“மகன் என்பவன் வளர்ப்பினாலும் மகனாகிறான்”
அப்பாக்களின் அருகாமையை விரும்பும் குழந்தைகளின் குரலாக
பாதர்ஸ்டேவிற்காக பள்ளியிலிருந்து காகித பூச்செண்டு தயாரித்து
வந்து தந்த மகனிடம்
” நன்றி கெய்தா, எதற்காக இரண்டு பூச்செண்டு?
“ அது என் ரோபோ பொம்மையை சரி செய்து கொடுத்த “ரூயிஸி”யின் அப்பாவுக்கு..
அன்பை மிக உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் இந்த படத்தின்
மொத்த வசனமும் செறிவான காட்சியமைப்பும் நமக்குள் எல்லையில்லாத ஒரு அன்பின் புரட்சியை
கிளர்த்தி விடுகிறது் என்பது மட்டும் நிஜம்.
கொத்துக்கறியும்,வடகறியுமாக மாற்றி,மாற்றி தமிழ்சினிமா கால்
நூற்றாண்டுகளாக தாளித்து வந்த அதே ஆள் மாறாட்ட கதைதான், ஆனால் அது இங்கு வெளிப்பட்ட
விதமும், வெளிக்கொணரும் அன்புமே, இதை சிறந்த உலக சினிமாக்களுள் ஒன்றாக்கிவிடுகிறது.
சொந்த மகன்களை,மகள்களை சாதியின் காரணம் கெளரவ கொலை என பெயரிட்டு காட்டுமிராண்டித்தனம் நடத்தும் சாதி வெறியர்கள் வாழும் தேசத்திற்கு, ஒரே இரத்தம், சொந்த வாரிசு என்பதையெல்லாம்
தாண்டிய அன்பின் எல்லை என்பது எவ்வளவு தூரம் நீளமானது, எந்த அளவு அழமானது, அன்பு இருக்கும் மனித கலாசாரம் என்பது எவ்வளவு நாகரிகமானது என்பதை மயிலிறகால் வருடி சொல்லித்தருகிறது லைக் பாதர், லைக் சன்,