Tuesday, December 23, 2014

பிசாசு (2014) - அதீதத்தின் ருசி



முதல் காட்சியிலேயே படத்தின் மொத்த மையத்தையும் திறந்து விட்டாரே ? ஒரு பேய் படத்திற்கு தேவை யார் பேய்? என்கிற சஸ்பென்ஸ்தானே, இந்த பெண்தான் பேயாகும், என கதையின் மையத்தை பார்வையாளர்களுக்கு திறந்துவிட்ட பின், என்ன பெரிய சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது. இப்படி எதிர்வினை கேள்வியுடன் தான் ஆரம்பிக்கிறது பிசாசு, எனேனில் அனேக பேய் சினிமாக்களில், இடைவேளைக்கு பிந்தைய கதை என்பது யார் அந்த பேய்? எங்கிருந்து/ஏன் வந்தது? எப்படி அதை துரத்திவிடுவது? என்பதாகத்தான் இருக்கும்.

அந்த மூன்று கேள்விகள் கொண்ட கோட்பாட்டில் வந்த அத்தனை தமிழ் சினிமாக்களையும், கட்டுடைத்ததே இந்த படத்தின் முதல் வெற்றி. அப்படி கட்டுடைப்பதன் அத்தியாவசியம் நோக்கி அடுக்கப்பட்ட அடுத்தடுத்த காட்சிகளின்  நேர்த்தியும்,புனைவுகளும், இந்த சினிமாவை இதுவரை வந்த ஹாரர் ஜெனர் சினிமாக்களில், அசுரப்பாய்சலில் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது.

பொதுவான பேய் குறித்த சிந்தனைகளின் எதிர்திசைதான் இந்த கதையின் களம். பேய்களை சைக்கலாஜிக்களாக அணுகும் அனேக அயல் திரைப்படங்கள் பார்த்திருந்தாலும், தமிழில் இது புது முயற்சி என்பதோடு இல்லாமல், பிசாசுகளின் எதிர் சிந்தனையை அன்பின் வழி கட்டமைத்த அந்த கலைஞனின் பிரயாசையை அனைவரும் உச்சிமுகர்ந்து வரவேற்க வேண்டும், என்பதே இந்த படைப்பிற்கு நாம் செய்யும் கைமாறு.

ஒரு பீர் openar'ஐ கொண்டு பிசாசின் வருகையை காட்சி வழி open செய்வது, நிகழ்ந்துவிட்ட நிறங்கள் தொடர்பான சிக்கலை முன்னிருந்தே கட்டமைத்து வந்து அதை வெகு இயல்பாக பார்வையாளன் வசம் சேர்ப்பது, ஒரு தகப்பனின் கதறலை இருதயத்தினுள் உணர்வுப்பூர்வமாக நிறுவுவது, இடைச்செருகலாக இருந்தாலும் அமெரிக்க நாட்டின் பேராசையை கதாபாத்திரத்தின் வழி பகடி செய்வது, கிராபிக்ஸ் ஏதுமின்றியும் வெற்றிகரமாக பிசாசை காட்சிப்படுத்தியது, இறுதி காட்சியில், உண்மை ஒழுகுவதாக ஒட்டை தண்ணீர் குடத்தை குறியீடாக வைத்தது, என படம் நெடுக, கதையை நோக்கி மையல் கொள்ள காட்சிகள் படைத்ததோடு, கதையின் மையப்புள்ளியை நேசிக்கவும் வைத்ததே இந்த படைப்பில், மிஷ்கின் எனும் கலைஞனின் ஆகச்சிறந்த வெற்றி.

பிசாசு எனும் இந்த அதீத கற்பனையின் ருசி மிக மிக இனிப்பான ஒன்று. என்பதில் என்னளவில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

Tuesday, December 9, 2014

என் பொம்முக்குட்டி அப்பாவுக்கு


கோணங்கள் அமைப்பின் சார்பாக நடந்து வரும் உலக சினிமா திரையிடலில், கடந்த ஞாயிறன்று பார்த்த Like Father, Like Son (2013திரைப்படத்தை பற்றி,  
    

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை தெரியவில்லை.
-          - கலாப்ரியா

கலாப்ரியாவின் இந்த ஒற்றைக்கவிதை  நம் மனதுக்குள் ஏற்படுத்தும் அத்தனை உணர்ச்சிக்குவியல்களையும், மனிதப்பறவைகளின் வாழ்வியலில் பொருத்தி காட்சிகளின் அடுக்குகளில் பாசம் எனும் பாஷையை இரத்தமும்,சதையுமாக, நமக்குள் கடத்திவிடுவதோடு மனித இனத்தின் உன்னத அன்பை பறைசாற்றும் ஜப்பானிய தேசத்தின் அற்புத திரைப்படமே இந்த லைக் பாதர் லைக் சன்,

ஜப்பானின் எதோ ஒரு நகரில், வெற்றி பெற்ற பொறியாளனும், காலத்தின் பொருத்தபாட்டுடன் ஒத்திசைந்து பணம் திரட்டும் வழியில் செயல் படுபவனும், உயர்தர நாகரிகம் கொண்ட ஒரு பணக்கார தந்தைக்கு மனைவியும், “கெய்தா” எனும் அழகிய ஆறு வயது மகனும் உள்ள குடும்பம் இருக்கிறது, ”கெய்தா”விற்கு அவனின் பணக்கார தந்தை அவனுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை என்கிற மனவருத்தம் உண்டு, மேலும் அக்குடும்பம் குட்மார்னிங், வெல்கம் ஹோம், பியானோ கிளாஸ், போன்ற உயர்தர குடும்பங்களின் சம்பிரதாய கட்டமைப்புடன் வாழ்ந்து வருகிறது.

அதே நகரில் ஒரு சிறிய கடை வைத்திருப்பரும் நடுத்தர குடும்பத்தை நடத்தி வருபவருமான ஒருவருக்கு மூன்று குழந்தைகள் மற்றும் நிர்வாக திறமை வாய்ந்த மனைவியும் இருக்கிறார்கள், இவர்களின் 6 வயது மகனின் பெயர் ”ரூயிஸி” அக்கறை நிறைந்த அன்பை வெளிப்படுத்துவதும், குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடவும் எந்நேரமும் மகிழ்ச்சியில் திளைக்கும் மிக அழகான குடும்பம் இவர்களுடையது.

 ”கெய்தா” வை பள்ளியில் சேர்த்த சில மாதங்களுக்கு பின்னர், அவன் பிறந்த மருத்துவமனையிலிருந்து ஒரு அவசர அழைப்பு உயர்தர குடும்ப தந்தைக்கு வருகிறது, அதன் பொருட்டு விசாரிக்க சென்ற அவர்களுக்கு மருத்துவமனை 6 வருடங்களுக்கு முன்னர் அங்கு பிறந்த இரண்டு குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து இடம் மாறிவிட்டதாகவும், தீவிர விசாரனை  மேற்கொண்டதில் ”கெய்தா” அவர்களின் மகன் இல்லையென்றும் பேரதிர்ச்சியை அளிக்கிறது. சில நாட்கள் கழித்து, மருத்துவமனை நடத்திய மரபனு பரிசோதனைகளின் முடிவில், அதே நகரை சேர்ந்த ஒரு நடுத்தரவசதி கொண்ட குடும்பத்தில் வாழும் “ரூயிஸி” தான் அவர்களின் மகன் எனவும் ”கெய்தா” அந்த நடுத்தர குடும்பத்தின் மகன் எனவும் தெரிவிக்கிறது, மேலும் இரண்டு குடும்பங்களையும் சந்தித்து பேசவும் வைக்கிறது,

நடந்துவிட்ட இந்த சிக்கல் குறித்து அவ்விரு குடும்பங்களும் விவாதித்து ஒரு நாள் மட்டும் அவ்விரு சிறுவர்களையும் இடம் மாற்றிப்பார்க்கலாம் என முடிவு செய்து, தத்தமது குழந்தைகளை இடம் மாற்றிப்பார்க்கிறது, இரு குடும்பங்களும் பொது இடங்களில் சந்தித்து பேசி மேலும் இது குறித்து விவாதித்து ஒரு நாள் மொத்தமாக இரு குழந்தைகளையும் இடம் மாற்றி விடுகிறார்கள், இதற்கு பிறகு இரண்டு தந்தைகளுக்குள்ளும், தாய்களுக்குள்ளும், குழந்தைகளுக்குள்ளும் நீள்கிற வெம்மையை ஒவ்வொரு காட்சியும் கவித்துமாக நம்முள் கடத்துகிற சுவாரஸ்யத்தினை இந்த திரைக்காவியத்தை தரிசித்தால் மட்டுமே கிட்டும்.

இந்த படத்தின் தாய்,தந்தை,குழந்தை, என ஒவ்வொருவரும் பேசுகிற வசனங்கள் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

உதாரணமாக குழந்தைகள் இடம் மாறப்போகும் அந்த நாளில், அந்த இரு தந்தைகளும் பேசிக்கொள்ளும் வசனம்.

“பட்டம் விடுவது என்பது மிக மகிழ்ச்சிகரமான விளையாட்டு, இப்போதெல்லாம் பட்டங்கள் தானாகவே பறக்கிறது, பட்டம் செய்ய பேப்பரை மடித்து ஒரு வாலை ஒட்டவைத்து அதை காற்றில் பறக்க விடுவதென்பது அலாதியான இன்பம்,  
”ரூயிஸை” உங்கள் வீட்டுக்கு அழைத்து போனதும் அவனுக்கு வாரத்திற்கு ஒரு முறையேனும் பட்டம் விட சொல்லிக்கொடு, அவனுக்கு பட்டம் விடுவது என்றால் மிக பிடிக்கும்”

“என் தந்தை எனக்கு பட்டம் விட சொல்லித்தந்த தந்தையாக இருந்ததே இல்லை”

“ம்ம் உன் சூழ்நிலை எனக்கு புரிகிறது, உன்னையும் உன் தந்தைபோலவேதான் உன் குழந்தையிடம் செயல்பட வேண்டும் என எதுவும் நிர்பந்திப்பது இல்லையே ?”

நீரோடையின் முன்பாக படமாக்கப்பட்டிருக்கும் இந்த காட்சியும், அதை தொடர்ந்து அவர்கள் மொத்த குடும்பமும் எடுத்துக்கொள்ளும் ஒரு புகைப்படமும், மொத்த கதையின் ஒரு அழகான குறியீடு.

வளர்த்த மகனின் இருப்பை பிரிந்த தாய்மையின் குரலாக ஒலிக்கும் மற்றொறு வசனம்

”மகன் என்பவன் ஒரே இரத்தம் என்றால் மட்டுமே மகனாகிறான்”

“மகன் என்பவன் வளர்ப்பினாலும் மகனாகிறான்”

அப்பாக்களின் அருகாமையை விரும்பும் குழந்தைகளின் குரலாக
பாதர்ஸ்டேவிற்காக பள்ளியிலிருந்து காகித பூச்செண்டு தயாரித்து வந்து தந்த மகனிடம்

” நன்றி கெய்தா, எதற்காக இரண்டு பூச்செண்டு?

“ அது என் ரோபோ பொம்மையை சரி செய்து கொடுத்த “ரூயிஸி”யின் அப்பாவுக்கு..

அன்பை மிக உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் இந்த படத்தின் மொத்த வசனமும் செறிவான காட்சியமைப்பும் நமக்குள் எல்லையில்லாத ஒரு அன்பின் புரட்சியை கிளர்த்தி விடுகிறது் என்பது மட்டும் நிஜம்.

கொத்துக்கறியும்,வடகறியுமாக மாற்றி,மாற்றி தமிழ்சினிமா கால் நூற்றாண்டுகளாக தாளித்து வந்த அதே ஆள் மாறாட்ட கதைதான், ஆனால் அது இங்கு வெளிப்பட்ட விதமும், வெளிக்கொணரும் அன்புமே, இதை சிறந்த உலக சினிமாக்களுள் ஒன்றாக்கிவிடுகிறது.

சொந்த மகன்களை,மகள்களை சாதியின் காரணம் கெளரவ கொலை என பெயரிட்டு காட்டுமிராண்டித்தனம் நடத்தும் சாதி வெறியர்கள் வாழும் தேசத்திற்கு, ஒரே இரத்தம், சொந்த வாரிசு என்பதையெல்லாம் தாண்டிய அன்பின் எல்லை என்பது எவ்வளவு தூரம் நீளமானது, எந்த அளவு அழமானது, அன்பு இருக்கும் மனித கலாசாரம் என்பது எவ்வளவு நாகரிகமானது என்பதை மயிலிறகால் வருடி சொல்லித்தருகிறது லைக் பாதர், லைக் சன், 



Thursday, December 4, 2014

மேக் இன் இந்தியா ( Anything,Anywhere,Anyways )

குடலைப்பிடுங்கும் நாற்றத்துடன் உள்ள சாக்கடைகளையும்,கால்வாய்களையும்,மலக்கிடங்குகளையும்,குப்பைத்தொட்டிகளையும், எப்போதும் போல நடுத்தர,கீழ்மட்ட மக்களே புலங்கி அதை அடித்தட்டு மக்கள் சுத்தம் செய்வதென்பது, காலம் காலமாக ஒரு புறமாக நடந்து வந்தாலும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் அவர்களால் முன்மொழியப்பட்டு, இந்தியாவின் ஆகச்சிறந்த சீமான்களாலும்,சீமாட்டிகளாலும் வழிமொழியப்பட்ட “க்ளீன் இந்தியா” எனும் திட்டம் எப்படி நடைபெறுகிறது என்பது நாமனைவரும் அறிந்த உண்மை. அந்த சாக்டைகள்,கால்வாய்கள்,பொதுகழிப்பிடங்கள், மூக்கை வைத்து கூட பார்க்க விரும்பாத பெரும் சீமான்களும்,சீமாட்டிகளும், குப்பைகளே இல்லாத சாலையில் குப்பை இருப்பதாக காட்டி, அதை சுத்தம் செய்வதாகவும் காட்டி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்தடையும், புகைபடங்களில் சில நூறு சமூக சேவக,சேவகிகளை அடையாளம் காட்டியதே அந்த க்ளீன் இந்தியா திட்டத்தின் ஆகச்சிறந்த சிறப்பென்றால் அது மிகையல்ல.

அப்படிப்பட்ட அந்த வெற்றிகரமான திட்டத்திற்கு, பிறகு நமது பாரத பிரதமரால் முன்மொழியப்பட்டுள்ள அடுத்த திட்டம், ”மேக் இன் இந்தியா” வாகும். அதாவது பன்னாட்டு முதலாளிகளையும்,நிறுவனங்களையும், எல்லா பொருட்களையும் இந்தியாவிலே உற்பத்தி செய்து கொள்ளலாம். அதற்கு தேவையான அத்தனை வளங்களும் எங்களிடம் தாரளமாக இருக்கிறது, விரைந்து வாரீர், வந்து பயனடைவீர். என்பதே அந்த திட்டத்தின் சாரம். இதன் மூலம் இந்தியாவில் தொழில் வாய்ப்பு பெருகும், பொருளாதாரம் பெருகும், வளங்கள் சுரண்டப்படும் என்பது ஒருபுறமாக இருப்பினும் இந்தியா நிச்சயமாக வல்லரசு ஆகிவிடும் என்பது ஊர்ஜிதம் என நம்பும் அப்பாவி மக்களுக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.

“ARGO” என்றொரு அமெரிக்க திரைப்படம் வந்தது, அத்திரைப்படத்தின் கதையாவது ஈரானின் அதிபர் ஒரு அமெரிக்க கைக்கூலி என அந்நாட்டு மக்கள் ஏக வெறுப்பில் இருந்து வருகையில், திடிரென உருவாகும் உள்நாட்டு கிளர்ச்சியால் ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகம் அம்மக்களால் சிறைபிடிக்கப்படுகிறது, தூதரகத்தில் பணியாற்றும் 6 அமெரிக்க அலுவலர்கள் அங்கிருந்து தப்பி அங்கிருக்கும் கனடா நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் வீட்டில் தஞ்சமடைகிறார்கள், அவர்களை மீட்க அமெரிக்காவில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி போலியாக ஒரு சினிமா குழுவை உருவாக்கி ஈரானில் படமெடுக்க லொகேஷன் பார்க்க வந்திருப்பதாக, ஈரானின் கிளர்ச்சியாளர்களை நம்ப வைத்து, அந்த அறுவரையும் வெற்றிகரமாக மீட்டு தாய்நாடு சேர்ப்பதாக ( வழக்கம்போல அமெரிக்க தேச சொம்புகளையடித்து) உணர்ச்சிகரமாக முடியும் அத்திரைப்படத்தின் கதை.

இந்த சினிமாவில் வரும் திரைக்கதைக்கும், அதன் நடிகர்களுக்கும் சற்றும் சளைக்காத ஒரு கதையையும், ஆகச்சிறந்த நடிகர்களின் நடிப்பு மட்டும் மிகச்சிறப்பான திரைக்கதைகளால் கட்டமைக்கப்பட்டதே இந்தியா எனும் நாடும் அதன் அதிகாரிகளும். 1980களில் இப்போதைய ”மேக் இன் இந்தியா” போலவே, இந்தியாவில் உற்பத்தி செய்ய அப்போதைய எதோ ஒரு திட்டத்தின் கீழ் வந்த கம்பெனிதான் “யூனியன் கார்பைடு” எனும் நிறுவனம். போபாலில் 1984 டிசம்பர் 2,3, தேதிகளில் அந்நிறுவனம் மெதில் ஐசோ சயனைட் எனும் நச்சை காற்றில் கடத்தி கொத்து கொத்தாக மனித பலிகளை நிகழ்த்திய வரலாறு நாமறிந்ததே. உலகமே துக்ககரமாக இருந்த அந்த இரண்டு நாட்களில், பெரும் கோரத்தின் மிச்ச உயிர்களும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும் போதே சூட்டோடு சூட்டாக அந்த நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை அந்த ARGO திரைப்படத்தின் அத்தனை சுவாரஸ்யங்களோடும் அவரது தாய் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தது மட்டுமின்றி இன்று வரை அவரின் ஒற்றை கேசத்துக்கு எதிராக ஒரு பெட்டி கேசை கூட போட முடியாத ஆகச்சிறந்த கலைஞர்களை கொண்டதே நமது அரசாங்கமும்,அதிகாரமும். 

அத்தனை உயிர்களின் பலி கொண்ட அந்த நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் தனது 62 வயதில் மிக பத்திரமாக தன் தாயகம் சென்று சேர்ந்து தனது 92 வயதுவரை நிறைவாழ்வு வாழ்ந்து உயிர் நீத்தார். என்பது இனி எப்போதும் மாற்றியெழுத முடியாத கசப்பான உண்மை.

நடந்தவை எல்லாம் போகட்டும், தற்போதைய ”மேக் இன் இந்தியா” திட்டங்களோ, அதையொற்றி நம் நாட்டில் படையெடுக்கப்போகும் பன்னாட்டு நிறுவனங்களோ எவ்வித தயக்கமுமின்றி தைரியமாக இங்கு படையெடுக்கலாம், பொருளாதாரத்தை பெருக்கலாம், போபால் விஷவாயு போல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எதேனும் விபரீதங்களை அக்கம்பெனிகள் நிகழ்த்தினாலும், அவர்களை பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க இங்கு ஆட்கள் உண்டு, அடுத்த நாளைப்பற்றிய ஆயிரம் கனவுகளை சுமந்து உறங்கி  மடிந்து போன மக்களின் ஆன்மாக்களுக்கு இன்றுவரையும், இனிமேலும் பதில் சொல்லத்தான் இங்கு யாரும் இல்லை.

மேக் இன் இந்தியா-Anything,Anywhere,Anyways.

காவியத்தலைவன் (2014)


தமிழ்சினிமாவில் வரலாற்றை மையப்படுத்திய புனைவு கதையொன்றை, அந்த வரலாற்றின் அட்சுரம் பிசகாமல் சொல்வதென்பது கடினமான காரியம்தான். மாறாக அயல் சினிமாக்களில் அது வெற்றிகரமாக நிறுவப்பட்டே வந்திருக்கிறது உதாரணமாக டைட்டானிக்,பியர்ல் ஹார்பர், என ஏக வெற்றிச்சித்திரங்களுண்டு.

காவியத்தலைவனும் அத்தகைய முயற்சியே ஆனால் அது வெற்றிகரமாக சொல்லப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழகத்தில் நாடக கலை என்பது ஒரு நெடிய வரலாற்றைக்கொண்டது, அதை மையப்படுத்திய புனைவை மிக சிறப்பாக சொல்லவில்லை. அனேக இடங்களில் இந்த திரைப்படம் தமிழ்சினிமா ரசிகனை சமரசம் செய்தே வெளிப்பட்டிருக்கிறது, அதுவே இதன் மிகப்பெரும் பலவீனமாக இருக்கிறது. மிக மிக தொய்வான திரைக்கதை இதை ரசிக்கும் படியாக காட்டவில்லை என்பதே நிஜம்.

ஒரு நாடக குழுவை சார்ந்த இரு பெரும் நடிகர்களுக்கிடையில் ஒருவருக்கு நிகழும் யார் பெரியவன், என்ற மனப்போராட்டமும் அதை தொடர்ந்து அந்த நடிகன் நிகழ்த்தும் சில விளைவுகளும் ஆனதே நாடக வரலாற்றையொற்றிய இத்திரைப்படம்.

Black swan என்றொரு அமெரிக்க திரைப்படம் உண்டு. பாலோ நடனம் என்ற கலையை மையப்படுத்திய அந்த கதையில் அக்கலையை உயிராக நினைத்து  (ப்ரித்விராஜ்  போல ) வாழும் பெண் கலைஞர் ஒருத்திக்கு நாடக கலையை போலவே ராஜபார்ட், ஸ்த்ரிபார்ட், மாதிரியான அங்கீகாரம் தொட்டு ஏற்படும் மன நிலைகளை அதன் பொருட்டு அந்த அங்கீகாரம் அவளை கூட்டிச்செல்லும் அதீத விளைவுகளை மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார்கள்.

ஏறக்குறைய அதே மனப்போராட்டத்தையொத்த காவியத்தலைவனில் அது சிறப்பாக சொல்லப்படுவதற்கு மாறாக தலையை சுற்றி மூக்கை தொடும் பழைய பல்லவி கலந்த எளிதில் யூகிக்க கூடிய திரைக்கதையால், மிக தட்டையாகவே வெளிப்பட்டிருக்கிறது. இதுவே இந்த படத்தின் மிகபெரிய பலவீனமாக இருக்கிறது. அது போக பிரித்விராஜ்,வேதிகா, நாசர் தவிர்த்த பாத்திர தேர்வும் ரகுமானின் இடைசெருகலான இசையும்,அந்த பலவீனத்தோடு கைக்கோர்த்து மிகுந்த ஆயாசத்தைத்தான் தருகிறது.

ஆசானின் ஒவ்வொரு கதையையும் ஒரு திரைப்படத்தை படிப்பது போன்ற சுவாரஸ்யத்தை தரக்கூடியது, ஆனால் ஏனோ அவர் பங்கு பெற்ற ஒவ்வொரு திரைப்படமும் கொட்டாவி வரக்கூடிய புத்தகத்தை படிப்பது போன்ற அயற்சியத்தான் தருகிறது, அன்பின் ஆசானே பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம்.

இத்தனை பலவீனங்களையும் கடைந்தெடுத்துப்பார்த்தால் பலமாக ஒரே ஒருத்தர்தான் இருக்கிறார். அவர் ப்ரித்விராஜ். மனிதர் கோமதி பாகவதராக அனாயசமாக வாழ்ந்து தள்ளியிருக்கிறார். கொழும்பிலிருந்து திரும்பியதும் சித்தார்த்தை விசாரித்து விட்டு, அப்படி ஒருவர் இல்லையென்பதாக பதில் வந்ததும் உதட்டோரமாக குரூரப்புன்னகையொன்றினை உதிர்ப்பதாகட்டும், காய்ச்சலில் கிடந்தாலும் ஈகோவின் பொருட்டு நடிக்க கிளம்புவதாகட்டும் என்னே ஒரு அற்புதமான நடிப்பு.

ப்ரித்விராஜ் உன் மனசுல என்னதான் இருக்கு என வேதிகாவை கேட்கும் போது வேதிகா பின்புறமாக இருக்கும் சித்தார்த்தை பார்க்கும் காட்சியிலும், கர்ணமோட்சம் நாடகத்தின் இறுதியில் அர்ச்சனாக சித்தார்த் எதை ஜெயித்தாய், என பாடுவதாக காட்டியிருக்கும் காட்சியிலும் மட்டுமே வசந்தபாலன் படம் என்பது நினைவுக்கு வருகிறது, மற்றபடி சொல்ல ஏதுமில்லை.

எவ்வளவு குறைகள் இருப்பினும் தமிழ்சினிமாவில் இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கது என்பது மட்டும் நிஜம். ஆகவே திரை அரங்கில் வருகிற கொட்டாவியையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டேனும்,  காவியத்தலைவன் என்கிற இந்த சீரிய முயற்சியை வரவேற்போம்.