Tuesday, December 23, 2014

பிசாசு (2014) - அதீதத்தின் ருசி



முதல் காட்சியிலேயே படத்தின் மொத்த மையத்தையும் திறந்து விட்டாரே ? ஒரு பேய் படத்திற்கு தேவை யார் பேய்? என்கிற சஸ்பென்ஸ்தானே, இந்த பெண்தான் பேயாகும், என கதையின் மையத்தை பார்வையாளர்களுக்கு திறந்துவிட்ட பின், என்ன பெரிய சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது. இப்படி எதிர்வினை கேள்வியுடன் தான் ஆரம்பிக்கிறது பிசாசு, எனேனில் அனேக பேய் சினிமாக்களில், இடைவேளைக்கு பிந்தைய கதை என்பது யார் அந்த பேய்? எங்கிருந்து/ஏன் வந்தது? எப்படி அதை துரத்திவிடுவது? என்பதாகத்தான் இருக்கும்.

அந்த மூன்று கேள்விகள் கொண்ட கோட்பாட்டில் வந்த அத்தனை தமிழ் சினிமாக்களையும், கட்டுடைத்ததே இந்த படத்தின் முதல் வெற்றி. அப்படி கட்டுடைப்பதன் அத்தியாவசியம் நோக்கி அடுக்கப்பட்ட அடுத்தடுத்த காட்சிகளின்  நேர்த்தியும்,புனைவுகளும், இந்த சினிமாவை இதுவரை வந்த ஹாரர் ஜெனர் சினிமாக்களில், அசுரப்பாய்சலில் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது.

பொதுவான பேய் குறித்த சிந்தனைகளின் எதிர்திசைதான் இந்த கதையின் களம். பேய்களை சைக்கலாஜிக்களாக அணுகும் அனேக அயல் திரைப்படங்கள் பார்த்திருந்தாலும், தமிழில் இது புது முயற்சி என்பதோடு இல்லாமல், பிசாசுகளின் எதிர் சிந்தனையை அன்பின் வழி கட்டமைத்த அந்த கலைஞனின் பிரயாசையை அனைவரும் உச்சிமுகர்ந்து வரவேற்க வேண்டும், என்பதே இந்த படைப்பிற்கு நாம் செய்யும் கைமாறு.

ஒரு பீர் openar'ஐ கொண்டு பிசாசின் வருகையை காட்சி வழி open செய்வது, நிகழ்ந்துவிட்ட நிறங்கள் தொடர்பான சிக்கலை முன்னிருந்தே கட்டமைத்து வந்து அதை வெகு இயல்பாக பார்வையாளன் வசம் சேர்ப்பது, ஒரு தகப்பனின் கதறலை இருதயத்தினுள் உணர்வுப்பூர்வமாக நிறுவுவது, இடைச்செருகலாக இருந்தாலும் அமெரிக்க நாட்டின் பேராசையை கதாபாத்திரத்தின் வழி பகடி செய்வது, கிராபிக்ஸ் ஏதுமின்றியும் வெற்றிகரமாக பிசாசை காட்சிப்படுத்தியது, இறுதி காட்சியில், உண்மை ஒழுகுவதாக ஒட்டை தண்ணீர் குடத்தை குறியீடாக வைத்தது, என படம் நெடுக, கதையை நோக்கி மையல் கொள்ள காட்சிகள் படைத்ததோடு, கதையின் மையப்புள்ளியை நேசிக்கவும் வைத்ததே இந்த படைப்பில், மிஷ்கின் எனும் கலைஞனின் ஆகச்சிறந்த வெற்றி.

பிசாசு எனும் இந்த அதீத கற்பனையின் ருசி மிக மிக இனிப்பான ஒன்று. என்பதில் என்னளவில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

No comments:

Post a Comment