Monday, January 12, 2015

A SIMPLE LIFE (2011) - எளியவர்களின் அன்பு




கோணங்கள் அமைப்பு தனது உலகசினிமா திரையிடல்களினால், மாதந்தோறும் இரண்டு ஞாயிற்றுக்கிழமை மாலைகளை கவித்துவமானதாக்கி விடுகிறது. கடந்த ஞாயிறின் மாலையும் ஹாங்காங் தேசத்தின் A SIMPLE LIFE எனும் மிக எளிமையான கவிதையால் கவித்துவமாகவே கடந்தது.

புகழ்பெற்ற ஹாங்காங் தயாரிப்பாளரான ரோஜர் என்பவர் வீட்டில் தனது 13 வயதுமுதல் 73 வயதுவரை வேலைக்காரராக வாழ்ந்த (Tao jie) எனும் பெண்மணியின் உண்மைக்கதையை அடைப்படையாக கொண்ட திரைப்படம் இது. 

(Tao jii ) அன்பின் ஊற்றானவள், தேடித்தேடி தரமான பொருட்கள் வாங்கி மிக நேர்த்தியாக சமையல் செய்யும் திறமையை கொண்டவள், தன் 13வயதில் அந்த குடும்பத்தில் வேலைக்கு சேர்ந்து இறுதிவரை தனக்கென ஒரு வாழ்க்கையை தேடிக்கொள்ளாமல், அக்குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் அனைவரையும் மிகுந்த பாசமூட்டி வளர்த்தவள், அம்மாக்கள் கடைக்குட்டிக்கு அதிக செல்லம் தருவதைப்போல ரோஜருக்கும் அதிக செல்லம் தந்து வளர்த்தவள், அக்குடும்பத்தில் அனைவரும் ஹாங்காங்கிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று செட்டிலாகிவிட, அக்குடும்பத்தில் இப்போது தனித்திருக்கும் ரோஜருக்கு பணிவிடை செய்து வருபவள், மிக எளிமையானவளான அவள் தன் வயது மூப்பின் காரணமாக ஒருநாள் திடீரென ஸ்ட்ரோக் நோயினால் பாதிக்கப்படுகிறாள், தன்னால் வேலை செய்ய முடியாது என்று தெரிந்ததும் தன்னை வேலையிலிருந்து விடுவித்துக்கொண்டு ரோஜருக்கு உதவியாக வேறு ஒரு பணிப்பெண்னை சேர்த்துக்கொள்ளச் சொல்கிறாள்.

அவளை அவளின் உடல்நிலையின் பொருட்டு, ரோஜர் தன் நண்பனின் நர்சிங்ஹோம் ஒன்றில் சேர்த்து, தன் வாழ்நாள் முழுவதையும் தன் குடும்பத்திற்காக அர்பணித்த ஜீவனின் இறுதிகாலத்தை தன்னால் முடிந்தமட்டும் மகிழ்ச்சியாக இருக்கவைக்க முற்படுகிறான். இந்த காலகட்டத்தில், அவர்களிடையே பரிமாறப்படும் உயிரோட்டமுள்ள அன்பு உன்னத காட்சிப்படிமங்களாகி இத்திரைப்படத்தை காவியத்துவமாக்கி விடுகிறது. 

மிக பொறுமையாக,எளிய காட்சிகளாக, அதிக பின்னனி இசை இல்லாத விதம் படமாக்கியதில், ஒரு சினிமாவைக் காண்கிறோம் என்ற பிரக்ஞையற்று அவர்களின் மிக இயல்பான வாழ்வை நேரடியாக காணும் பார்வையாளனாக நம்மை இருத்தி, கதைமாந்தர்களோடு சேர்த்து நம்மையும் taojii"யை விரும்பச்செய்து, அவளின் பிரிவின்பால் வருத்தம் கொள்ளவும் செய்கிறது.

கத்தியின்றி, ரத்தமின்றி சத்தமின்றி,பகட்டின்றி, ஒரு மயிலிறகின் வருடலாக மிக எளிமையானதொரு வாழ்க்கையை, அன்பை, இயல்பை, அதன் ஸ்பரிசத்தை 117நிமிடங்களுக்கு உணரச்செய்யும் அழகிய காவியம் இத்திரைப்படம். 

No comments:

Post a Comment