Saturday, November 22, 2014

பாரதி,நான்,நித்யா மற்றும் ஜீவா

ஒரு ஓவியத்தை கையாள்வதைப்போலத்தான் ஜீவாவை அணுகுகிறாள் நித்யா, அவளின் அக்கறை நிறைந்த பராமரிப்புகளுக்குப்பின்னர் அவனும் ஓவியமாகவே மிளிர்கிறான். ஓவியத்தை தொடங்குவது முதல் முடிப்பது வரையிலான இடைப்பட்ட நேரங்களை பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க எவரும் விரும்புவதில்லை. அதே போல ஒரே ஓவியத்தை திரும்ப திரும்ப வரைவதற்கும். எல்லோருக்கும் அந்த நேரமும் அப்படி பட்ட ஓவியமும் தேவையாக இருப்பதில்லை, அப்படித்தான் எனக்கும் இருக்கிறது, மேலாக இப்போதெல்லாம் ஜீவாவை ஓவியமாக காண்கிற பொறுமையும் என்னிடம் இருப்பதில்லை. பாரதிக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் ஜீவா இல்லாத வீட்டுக்கு போயிடலாமாப்பா எனச்சொல்லியிருப்பாளா பாரதி. 

பாரதி – என் மகளதிகாரம், என் இப்போதைய ஒரே பிடிப்பு, எனக்கும் நித்யாவிற்குமான பெருங்காதலின் சாட்சி. 4 வயதிற்குமேல் குழந்தைகள் உலகிலிருந்து வழிதவறி,கர்த்தரின் கைகளையும் கர்த்தரையும் தொலைத்த ஆட்டுக்குட்டி, அவளுக்கு இப்போது 11 வயது, சாரசரி குழந்தைகள் அனுபவிக்கின்றன எந்த விளையாட்டுகளிலும் அவள் ஈடுபட்டதில்லை ஜீவாவை கவனித்துகொள்ள நித்யாவிற்கு உதவி செய்யவே அவளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இன்னமும் குழந்தைதனத்திற்கு ஏங்குகிற ஏக்கம் வழிந்தபடி இருக்கும் முகம் கொண்டவள், இவளையும் நித்யாவையும் எப்படி இந்த துன்பகரமான சூழ்நிலையிலிருந்து விடுவிப்பதென யோசித்து கொண்டிருந்த நாளில் தான் அவள் அவ்வாறு சொல்லியிருந்தால்,

“ஒரு அக்கா நீ இப்படி பேசலாமா? பாவம்ல ஜீவா நம்ம தம்பியில்ல”
”அவனுக்கு நம்மள விட்டா யார் இருக்கா ? யார் அவன பாத்துக்குவா? போன்ற கிளிஷே வசனங்கள் எதுவும் தோன்றாத மன நிலையில்தான் நானும் இருந்தேன். இந்த 8 ஆண்டுகள் அப்படித்தான் இருக்க வைத்திருக்கிறது என்னை. 

நான் - நான் ராம்குமார், கோவையில் உள்ள ஒரு பெரிய ஹாரன் உற்பத்தி கம்பெனியின் கடைநிலை பொறியாளன். இப்போதைய இந்த வாழ்க்கையிலும் கடைபிணம்,கடைஉயிர், இரண்டுக்கும் இடைப்பட்டவனே நான், இப்போதைக்கு அவ்வளவே நான், நித்யா இல்லாத நான், அல்லது எனக்கு மிக பிடித்த நித்யாவின் மென்புன்னகை இல்லாத நித்யாவை கொண்ட நான்.அந்த பரிசுத்த புன்னகை இல்லாத நித்யா.

நித்யா - என் சொந்த அத்தைப்பெண், நான் நான்காம்வகுப்பு படிக்கும் போது காய்ச்சலில் கிடந்த எனக்கு ரொட்டி வாங்கி வந்ததோடு இல்லாமல் ஊட்டியும் விட்ட கணத்திலயே முடிவெடுத்திருந்தேன் நித்யாதான் என் மனைவியென்று.. ஆம் அப்படி குழைந்தைதனமாகத்தான் ஆரம்பித்தது, பின்னர் 10ஆம் வகுப்பில் என் நாய் சீஸர் காரில் அடிபட்டு கட்டுகளோடு கிடந்த போது தினமும் வந்து என் நாய்க்கு பிஸ்கட் தந்து பழக்கப்படுத்தியிருந்தாள் எஜமானனான என்னைவிட சீஸர் நித்யாவிற்குதான் அதிகமாக வாலாட்டுவது போல தோன்றியபோதும் நித்யாவை கைபற்றும் எண்னம் என்னிடம் அதிதீவிரமாகியிருந்தது,.. மென்மையான மெல்லிசைக்கும் நித்யாவிற்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமிருக்காது, யார் புன்னகை மிக மென்மையானது என நித்யாவிற்கும் மோனலிசா ஒவியத்திற்கும் போட்டி வைத்தாள் நிச்சயமாக நித்யாவே ஜெயிப்பாள் உலகின் மிக சிறப்பான குழிவிழும் கன்னத்தை கொண்ட, மென் புன்னகைக்காரி,

இந்த புன்னகைக்காரிக்கு அதிர்ந்து சிரிக்கவே தெரியாது என்பது பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலுவின் தலையில் சுத்தியல் ஒன்று விழும் காட்சிக்கு ஒட்டுமொத்த தியேட்டரே விழுந்தடித்து சிரித்துக்கொண்டிருக்கும் போது கூட அவள் இதழோரமாக மென்மையாக சிரித்ததை பார்த்தபோதுதான் தெரிந்தது, இந்த உலகின் மென்மையானவைகளின் அத்தனை பட்டியலிலும் முதன்மையானவள் இவளே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை என்னிடம் உண்டு, இவளை கைவிட்டுவிடாதே உடனே பற்றிக்கொள்ளென என்னுள் பொங்கிய காதல் சொல்லியது.. சொல்லியதொடு இல்லாமல் யாருமற்ற சாலை ஒன்றில் வழக்கமான பேச்சுக்கள் ஒய்ந்து மவுனங்கள் பேசத்தொடங்கிய போது, அக்காதல் நதியாக பிரவாகமெடுத்து நரம்புகளின் வழி பாய்ந்து அவளின் கரம் எனும் கடலில் மிருதுவாக சங்கமித்தது. அவள் திரும்பி பார்த்தாள், என் காதலை ஒப்புவித்தேன்.. என் வாழ்வின் மிக முக்கிய மகிழ்ச்சிகரமான ஸ்லோமோஷன் காட்சியொன்று நடந்தேறியது.. அவளுக்கும் விருப்பம்தானாம். அந்த மென்புன்னகை அவளை முந்திக்கொண்டு அவள் காதலை சொன்னது,

சொந்த அத்தைப்பெண், படித்தவன், வேலையிலிருப்பவன், இத்தியாதி, இத்தியாதி சுமூக காரங்களை கொண்ட எங்கள் காதல் திருமணத்தில் முடியாமல் போயிருந்தால்தான் ஆச்சர்யம். எல்லாம் இனிதாகவே நடந்து முடிந்தது. ஜீவாவை பிரசவிக்க மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டரில் நுழையும் வரையிலும் அவளின் பூக்கள் விரியும் சிரிப்பின் மகரந்ததூள்களில் மிதந்து கொண்டேதான் இருந்தேன் ஜீவா இப்படியென தெரிந்த நொடியிலிருந்து எல்லாம் தொலைந்து போனது,அல்லது அனைத்தையும், விழுங்கிக்கொண்டேதான் வந்து சேர்ந்தான் ஜீவா.

ஜீவா  – ஜீவாவை நர்ஸ் ஏந்திக்கொண்டுவந்து ”ஆண்குழந்தை பிறந்திருக்கிறது” என காட்டுவது போலவும் ஜீவா பொக்கைவாயை திறந்து அழுவது போலவும் நொடிக்கொரு தரம் தடுக்கி விழுந்த கனவோடு மருத்துவமனையின் காத்திருப்புச்சேரில் அவனுக்காக காத்திருந்தேன், மடியில் பாரதி உறங்கிக்கொண்டிருந்தாள், பகல் கனவு பலிக்காது என்பது உண்மைதான் போல அவனின் அறிமுகம் இன்குபேட்டருக்குள்ளாகத்தான் கிடைத்தது , வைக்கோல் மீது இயேசு சிலுவையுடன் பிறந்ததை போல எதேதோ ஒயர்கள் சூழ சாந்தமாக படுத்திருந்தான்.

ஜீவா குறைபிரசவ குழந்தை என்றார்கள், எடை போதவில்லை என்றார்கள்,மூளை வளர்ச்சியடையவில்லை என்றார்கள், முதுகுதண்டும் வளர்ச்சியடையவில்லை என்றார்கள், இவன் உயிர்பிழைப்பது கடினம் என்றார்கள், ஊனமாய் பிறந்திருக்கிறான் என்றார்கள், இறுதியாக இவன்தான் உன் கனவில் வந்தழுத பொக்கைவாய் மகன் என்றார்கள், பாரதியை இறுக அனைத்தபடி நித்யா ? என்றேன் மயக்க நிலையில் இருக்கிறார் தெளிய நான்கு மணி நேரமாகும் என்றார்கள். பிறகு பார்க்கலாம் என்றார்கள்.. ஆனால் அடுத்த எட்டு வருடத்திற்கு அவளிடம் அந்த மென்சிரிப்பை மட்டும் உன்னால் பார்த்துவிட முடியாதென மட்டும் யாரும் சொல்லவில்லை.

இதோ எட்டு வருடங்களாகிற்று, பாரதியின் குழைந்தைதனத்தையும், நித்யாவின் மென்சிரிப்பையும், எங்களின் இயல்பையும் முறித்துப்போட்டுவிட்டு படுக்கையில் ஒரு போன்சாய் மரத்தை போல, தன்னைத்தானே அசிங்கமாக்கிக்கொள்ளும் ஓவியத்தை போல எச்சில் வழிந்தபடி நாள்முழுதும் எதையாவது அரற்றிக்கொண்டே கிடக்கிறான் ஜீவா,

அவனின் நான்கு வயதில் கேட்டேன்

“ஜீவா மாதிரி குழந்தைகள கவனிச்சுக்க நிறைய ஹோம் இருக்கு நித்தி, இவன அங்க சேத்தி விட்டுறுவோம், போதும் இவ்ளோ நாள் நம்ம கஷ்டபட்டது போதும், பாரதி பியூச்சர நினைச்சு பாரு, அவளும் பாவம்தான? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இவன் கஷ்டபடறத நாம பாக்கிறது?

“ஜீவா மாதிரி அங்கயும் நிறைய குழந்தைக இருப்பாங்களா?”

“ஆமாம்”

”எப்படி ராம் மனசாட்சியே இல்லாம இந்த நிலைமையில இருக்கிற குழந்தைகள அங்க விடறாங்க?”

”புரிஞ்சிக்க நித்யா, இப்படிப்பட்ட நிலைமைல இருக்கிறதாலதான் விடறாங்க, அவங்க இயல்பு பாதிக்கப்படுதுங்கிறதுக்காகதான் விடறாங்க, பாரதி மாதிரி, என்ன மாதிரி, உன்ன மாதிரி பழைய சந்தோசங்கள திரும்ப கொண்டு வரத்தான் விடறாங்க”

“நம்மள நம்பி வந்த ஜீவன கைவிடறது பாவம் ராம், சின்ன சின்ன சுயநலமான காரணங்களுக்காகவெல்லாம் நான் ஜீவாவ விட்டுக்குடுக்க மாட்டேன், நீங்க புரிஞ்சுக்குங்க ராம், உடம்புல எந்த குறையும் இல்லாம இருக்கிற நானே ஹாஸ்டல்ல, அம்மாவோட அருகாமைய நினைச்சு எத்தன ராத்திரி அழுதுருக்கேன் தெரியுமா? ப்ளீஸ் ராம்…. ஜீவா பாவம்.

“விவாதம் இப்படி முடியும்போது ஹாஆஆஅஹஹுஅஹா” பரிகாசம் செய்வதைப்போல அரற்றினான் ஜீவா, அப்போது விழுந்தது வன்மம் இவன்மீது,

வளர்ந்து வளர்ந்து இதோ இன்றைய இரவு விருட்சமாகி இருக்கிறது.. எந்த அன்பு சுயநலமில்லாமல் இருக்கிறது?,அப்படி சுயநலமாக இருப்பதில்தான் என்ன தவறு உள்ளது.?. எல்லாம் பக்குவப்பட்டாகிவிட்டது இனி நிகழ்த்த வேண்டியிருப்பது கொலை மட்டுமே, தான் ஈன்ற தன் சவலைப்பிள்ளை குட்டியை தன் மற்ற குட்டிகளுக்கு வேண்டி தானே உன்னும் மிருகங்களின் சித்தாந்தம்தான் இது, உயிர்களின் அடிப்படையும் அதுதானே? நாகரிகம், மனிதஅறிவு எல்லாவற்றையும் மீறி இப்போது ஒரு காடு எனக்குள் பரந்து விரிந்து கிடக்கிறது, காட்டின் விதிகளும்.

அவனுக்கான இன்றைய இரவுப்பாலில் ஐம்பது டைசோஃபார்ம் மாத்திரைகளை கலந்தாகிற்று, ஒவ்வோரு டைசோஃபார்ம்களிலும் ஒர் இரவு தூக்கம் ஒளிந்திருப்பது போல மொத்தமாய் இந்த ஐம்பது மாத்திரைகளில் மற்றவர்களை பொருத்தமட்டிலும் ஒரு கொலை, ஒரு மரணம், ஒளிந்திருக்கிறது, என்னை பொருத்தவரையில் ஒரு விடுதலை ஒளிந்திருக்கிறது, எங்களுக்கும் ஜீவாவிற்குமான விடுதலை. நிறைவேற்றினேன்.


இந்த எட்டு வருடங்களில் எப்போதுமில்லாமல், நடுசாமத்தின் விளக்கவொன்றா, அமைதியான இந்த நேரத்தில். நான் ஊட்டிய இந்த பாலை மொத்தமாக குடிக்கும் முன்பாகவேனும், எனக்கு பிடித்த, என்னைப்பிடித்த அந்த நித்யாவின் அந்த மென்சிரிப்பை சிரித்துக்காட்டியிருக்கலாம், ஒருவேளை இதெல்லாம் நிகழ்ந்திருக்காது, படுபாவி இந்த பாலை முழுவதுமாக குடிக்கவைத்து, வாய் துடைத்து, கழுத்துவரை போர்வையை போர்த்தி விட்ட இந்த நொடியில் இதோ அந்த மென்சிரிப்பை உதிர்க்கிறான் ஜீவா.


Tuesday, November 18, 2014

பெருநகர ரிக்‌ஷா


அதீத பாய்ச்சலோடு
நகரும் நகரத்தினூடே
ஈடுகொடுத்து ஓடும்
கால்களோடு
பத்தாத பட்ஜெட்டுகளில்
சுரக்கும் வியர்வைகளை
துடைத்து துடைத்து
களைப்பான துண்டு சகிதமாக
உயர்ரக ஊர்திகள்
உற்சாகமாக ஓடும்
அதே ரோடுகளில்
அடைமழை அடைவெயிலோடு
நகரத்துடன் ஒத்து இல்லை
ஓரம் நகர்கிறது மூனுசக்கர சீவனம் !! 

Wednesday, November 12, 2014

கூண்டு

ஒரு கிளியை
கூண்டுக்குள்
அடைப்பதை போல
அத்தனை சுலபமானதல்ல
அதன் வானத்தை அடைப்பது !!

Sunday, November 9, 2014

சிவப்பு யானை

பெங்களூர்,எந்த பந்தயமும் நடைபெறாத ஒரு காலையில் மெல்லிய பனி படர்ந்திருந்த ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் சுற்று சுவரில் இருந்த ஒரு பிளவான விரிசலின் வழியே ஈக்கள் மொய்யப்பதை போல கூடி வெறித்து பார்த்து கொண்டிருந்த கூட்டத்தை "பந்தி..பந்தி...அல்லி...பந்தி" என காக்கிசட்டையனிந்த வட்டதொப்பி போலீசுகாரர்கள் லத்தியால் துரத்திக்கொண்டிருந்தனர் மைதானத்தின் ஓரத்திலிருந்த நாணற்புற்களின் அருகே ரத்தச்சேற்றில் குப்புற விழுந்து கிடந்த பிணத்திலிருந்து கிளம்பிய இரத்தப்புள்ளிகள் சில அடிகள் நீண்டு ஒரு புளியங்காயை போல சுருங்கி விழுந்து கிடந்த ஒரு ஆண்குறியில் முடிந்திருந்தது எந்த அசைவுமின்றி கிடந்த இவைகளை அசைந்தசைந்து விதவித கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர் ஃபோட்டோகிராபர்கள் 

பனியை கொஞ்சமாகவும் மழையை கொஞ்சமாகவும் மாறி மாறி ஏந்திக்கொண்டிருந்த பெங்களூரில் அடுத்த மூன்று மணித்தியாலங்களுக்கு பிறகு கமிசனர் அலுவலகத்தில் 

"சரியா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி மும்பையில் நடந்த  இரண்டு கொலைகளைப்போலவே இப்போது இங்கும் நடந்திருக்கிறது..என்ன செய்யலாம்னு இருக்கீங்க மிஸ்டர் கிருஷ்ணா" கமிசனர் நேராக விவாதத்தை தொடங்கினார் 

"நீங்க சொல்றது சரிதான் சார் எங்களுக்கும் மும்பை சம்பவத்த போலவே இதுவுமாங்கிறதுல டவுட் இருக்கு மும்பை போலீஸ ஏற்கனவே கான்டாக்ட் பன்னிட்டோம் கேஸ் சம்பந்தமான எல்லா விவரத்தையும் அனுப்ப சொல்லியிருக்கோம் இங்க நடந்த கொலை விவரம் டிவில டெலிகாஸ்ட் பன்னியிருக்கோம் சோ  கொலையானவர் யாருன்னு முதல்ல தெரியனும் அது போக போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் இன்னும் ஒரு மணி நேரத்துல கிடைச்சிரும் சார் பாரன்ஸிக் ரிப்போர்ட் கிடைக்க ஈவ்னிங் ஆகிடும் எல்லா ரிப்போர்ட்டும் கிடைச்சதும் இது தனிப்பட்ட முன் விரோதங்களினால நடந்ததா இல்ல மும்பை தொடர் கொலையான்னு விசாரிக்க முடியும் " விறைப்பாக சொல்லி முடித்தார் அசிஸ்டெண்ட் கமிசனர் கிருஷ்ணாஹெக்டே 

"ஒகே கோ அகேட்.. ஒன்ஸ் பைனலைஸ் ஆல் என்கொயரிங் ஸ்டேடஸ் மீட் அகெய்ன் இன் ஈவ்னிங்" விவாதத்தை கமிசனர் முடித்தார் 

பின்னிரவிற்கு பிறகு தூங்க சென்றுவிட்டு விடிந்த வெகுநேரம் கழித்து எழுந்து வந்தவனை போல எந்த கதிரையும் வீசாது சோம்பலாக எட்டிப்பார்த்த சூரியனையும் மீறி குளிர் சிலுசிலுவென வீசிக்கொண்டிருந்தது வரிசையற்ற எறும்புக்கூட்ட மக்களோடு நூறு சதவீத நகரத்தின் சாயல்களில் எப்போதும் போல இயங்கிக்கொண்டிருந்தது மெஜஸ்டிக் பேருந்துநிலையம்.. எதிர்புறம் இருந்த டீக்கடையின் வாசலில் பெங்களூர் டீக்கடைக்களுக்கே உரித்தான மிகச்சிறிய டம்ளரில் டீக்குடித்துக்கொண்டிருந்தாள் மேகலா அவள் கண்களில் நேற்றுக்குடித்த சாரயத்தின் நெடியோடு இன்னும் பாக்கியிருந்தது நடத்தி முடித்த அந்த கொலையின் நெடியும்.. தேநீரின் கடைசி மிடறும் இறங்கிய பிறகு குளிருக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது பிறகு ரோட்டில் இறங்கி பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்து இரயில் நிலையம் நோக்கி ஒரு துணிப்பையோடு தனது பருத்த உடலை தூக்கிக்கொண்டு யானை போல மெதுவாக நடந்தாள்.. யானை போல என்பதற்கும் மெதுவாக நடக்கவும் அவளிடம் ஒரு காரணம் இருக்கிறது அது அவள் இந்த உலகத்தில் வெறுக்கும் ஆயிரமாயிரம் ஆண்குறிகளில் ஒன்றான ஒரு குறியினால் வந்தது, அந்த ஆண் குறிதான் இவள் கொலைக்கணக்கின் பிள்ளையார் சுழி இன்னும் எத்தனை மீதம் என்பதும் அவளுக்கு தெரியாது.. 

அம்மையையும் அப்பனையும் இழந்து அம்மாச்சி பாட்டியின் நிழலில் பருவத்தின் பேரழகியாக தாமிரபரணி கரையோரம் வசித்து வந்தவளை அந்த குறி தான் காதலாகி கசிந்துருக வைத்தது.. எந்த சுவடுமில்லாது ஒரே இரவில் புலம் பெயர்த்து மும்பைக்கு கொண்டுவந்தது தாலியும் வீடும் பிறகு பார்த்துகொள்ளலாம் என வாக்கு தந்து விடுதியில் தங்க வைத்து புணர்ந்து தீர்த்தது எப்படியும் இரு நாளில் தாலி ஏறும் என நினைத்து காத்திருந்தவளை மொத்தமாக பொட்டலம் கட்டி தெரு நாய்களுக்கு வீசியெறிந்தது.. ஒற்றைக்குறியை நம்பி வந்தவளை அடுத்தடுத்த இரவுகளில் ஓவ்வொருகுறியாய் புணர சொன்னது அப்படியாகா எல்லா இரவையும் நரகமாய் கழிக்க வைத்தது சட்டையை பிடித்து நியாயம் கேட்கும் போதெல்லாம் அடித்து துவைத்தது வேறு குறியை தொட முடியாது என்று தீர்க்கமாக சொல்லி உறங்கிய இரவில் தன் பெண்குறி மீது கல்லை போட்டு சிதைத்தது அந்த காயம்தான் பின்னாட்களில் அவளை மெதுவாக நடக்க வைத்தது காயம் ஆறிய பிறகுதான் மேகலா ஆசுவாசமாக இருந்தாள் 

இனி யாரும் புணர முடியாத அளவுக்கு பெரும்காயம் அது... நரகத்தின் இரவுகள் எல்லாம் முடிவுக்கு வந்ததாய் நினைத்திருந்த சமயத்தில் அந்த குறி வேறோர் நரகத்தை அறிமுகப்படுத்தியது ஆயிரமாயிரம் ஆண்குறிகளை வாயினால் சுவைத்து இன்பம் தரவேண்டும் மும்பையில் இதுவும் ஒரு வகையான பாலியல் தொழில் பெரும்பாலும் இரவுக்குபின் கடற்கரையில் நடக்கும் தொழில்.. நம்பி வந்த குறி இதில் தள்ளிய சில காலம் கழித்து சில பல குறிகளை வாயில் அடைத்து சலித்தபின்னர் அவளுக்கு தோன்றியது இந்த ஆண்குறிகளெல்லாம் ஒரு வகையான பாம்பு அதற்கு விறைப்புதன்மை வந்தால் அது எதில் வேண்டுமானாலும் நுழையும் அது தன் வயதொத்த வயதுக்கு சிறிய அல்லது மீறிய எந்த எதிர்குறியாக இருந்தாலும் அது நுழைய விரும்பும் எந்த குறியும் கிடைக்காத போதும் எதிர் பாலினத்தின் எல்லா ஓட்டைகளிலும் நுழைய விரும்பும் பாம்பு அதை நசுக்க வேண்டும் தலையை கொய்து ரசிக்க வேண்டும் என தோன்றியிருந்தது 

பிரிதொரு இரவில் நரகத்தில் நுழைத்த அந்த குறியை கொய்யும் அந்த நாள் வந்தது 

"அவுசாரி முண்ட இன்னிக்கு கலெக்சன இவ்ளோதானாடி" கஞ்சா குடித்த போதையில் மெதுவாகத்தான் கேட்டான்

"இவ்ளோ மட்டுமில்லடா இதான் கடைசி" சற்றைக்கு முன் சந்தித்த வாடிக்கையாளனின் குறியை சுவைக்கும் முன் அவன் தந்த சாரயத்தின் போதை அவளை மீண்டும் அவனிடம் திமிரச்செய்தது 

"ஏண்டி நாயே இன்னிக்கு தலைமேல கல்ல போடவா"

"போட்டுத்தான் பாரேன்" 

"இந்தா இப்பவே போடறேண்டி குண்டி, உன் யானை சைசுக்கு அம்மிக்கல் பத்தாது இருடி பெரிய பாறையா தூக்கிட்டு வந்து போடறேன்"

"சரி போய்ட்டு வா"

"குண்டு முண்ட வாங்கினதெல்லாம் பத்தலையா யானைக்கு இன்னிக்கு ஏன் தும்பிக்க நீளுது"சொல்லிவிட்டு வேகமாக அறைந்தான் 

"மதம் பிடிச்சிருச்சுன்னு நினைச்சுக்க"அமைதியாக சொன்னாள் 

"தேவடியா முண்ட"என கத்தியவாறு எட்டி உதைத்தான் 

பீச் மணலில் விழுந்தவள் பலமாக சிரித்தாள்
வெறி கொண்டவனாக கையிலிருந்த பீர் பாட்டிலால் தலையில் அடிக்க ஓங்கியவனின் குறியில் ஒரு உதை வைத்தாள் பீர் பாட்டிலை கீழே விட்டுவிட்டு சுருங்கி விழுந்தான் 

அதே பீர் பாட்டிலை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்தாள் பாட்டில் சில்லாக தெறித்தது பின் கூரான பாட்டிலால் அவன் குரல்வளையில் குத்தினாள் மூச்சுக்காற்று இரத்தத்தோடு கழுத்து வழியாக வந்து துடித்தான் நிதானமாக அவன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்தவள் பேண்டை உருவி அவனது குறியை இழுத்து பிடித்து 
அறுக்க ஆரம்பித்தாள் அவனது ஓலம் வாய்வழியாக வெளியேற திராணியற்று கழுத்திலிருந்த கீறலில் இரத்தத்தோடு வெறும் காற்றாக வெளியேறியது சில ஆண்டுகளாக ஓற்றைகுச்சியை வைத்து அடக்கி வைத்திருந்த பாகனை துவம்சம் செய்த யானையாகியிருந்தாள் கையோடு அறுத்தெடுத்த குறியை சில அடிதூரம் கொண்டுசென்று வீசியெறிந்தாள் 

அரபிக்கடலில் ஒரு புனிதத்தின் கறையை கழுவிய ஆகிருதியில் திரும்பினாள் 

ஏன் கொலை? யார் கொலை? யார் கொலையாளி? என எந்த கவலையுமின்றி தினசரி செய்திகளில் மட்டும் இடம்பிடித்து பின் கரைந்துபோன ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே கடற்கரையில் வேறொருவன் குறியை அறுத்துப்போட்டாள் வழக்கமான வாடிக்கையாளனே தவிர அவளுக்கும் இவனுக்கும் எந்த பகையுமில்லை ஆனால் அவளை மீண்டும் மதம் பிடிக்க வைக்க அவனிடம் அந்த கொடும் குறியிருந்தது அந்த ஒரு காரணம் அவளுக்கு போதுமாய் இருக்கிறது 

அவள் பெங்களூர் வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது  இந்தியாவில் மும்பையைபோல இரண்டாம்வகை விபசாரம் நடக்கும் இடங்களில் பெங்களூரும் ஓன்று என சக பீச் தொழிலாளி சொல்லியிருந்தாள் மெஜஸ்டிக் ஏரியாவை சுற்றியிருக்கும் தியேட்டர்களின் வாசல்களில் நின்றால் வாடிக்கையாளன்கள் வரக்கூடும் பின் திரையரங்கத்தினுள்ளேயே தொழில் செய்து கொள்ளலாம் என கேள்விப்பட்ட வந்திருந்தாள்... அவளுக்கு மதம் பிடிப்பது மிக பிடித்திருக்கிறது ஆண்களின் மரண ஓலமும் இரத்தம் ஓழுக வெட்டி எறியும் ஆண்குறியில் ஆயிரமாயிரம் ஆணாதிக்கங்களை அடக்கிவிட்ட பெருமதம் பிடித்திருக்கிறது கடந்த இந்த ஒரு மாதமும் அவளுக்கு மதம் பிடிக்க வழியில்லை தியேட்டர்களில் கூட்டம் இருந்தது ஆகவே அந்த வெறியை தீர்க்க முடியாத தாகம் இருந்தது நேற்றுதான் அதற்கான வழி கிடைத்தது திரைஅரங்கின் உள்ளே வாய்ப்புணர்வு முடித்தபின் அவன்தான் அங்கு கூட்டி சென்றான் அந்த பெரு மைதானத்தில் விளக்குகள் ஏதுமற்ற இருளில் அவளுக்கு மீண்டும் மதம் பிடித்தது

இரயில் நிலையம் நுழைந்து சென்னைக்கு ஒரு ஜெனரல் டிக்கெட் எடுத்துவிட்டு தயாராக இருந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்சில் ஏறி அமர்ந்தாள் வழக்கமான கூவல்களுக்கு பிறகு இரயில் மெதுவாக பெங்களூரிலிருந்து புறப்பட்டது 

கண்ணாமூச்சி ஆட்டங்களில் ஓய்ந்திருந்த சூரியன் மீண்டும் உறங்க சென்றிருந்த மாலைவேளையில் லட்சத்து லட்சம் வாகனங்கள் ஓயாது ஒளிக்கற்றைகளை உமிழ்ந்துகொண்டே நகர்ந்து கொண்டிருந்தது கமிசனர் அலுவலகத்தில் கேஸ்பற்றி பேச ஆரம்பித்தார் கிருஷ்ணா 

"சார் கொலையானவன் பேர் சுரேஷ் அவன் ஒரு பெயிண்டர் சொந்தஊர் ஓசுர்" அவன் வீட்ல எல்லார்கிட்டயும் தெளிவா விசாரிச்சாச்சு அவனுக்கு தனிப்பட்டவிதத்துல எந்த முன் விரோதமும் இருக்கிற மாதிரி தெரியல..சோ இது திட்டமிட்டும் நடக்கல ரெண்டாவது மும்பையில் நடந்த இரட்டை சம்பவத்துக்கும் இங்க நடந்த சம்பவத்துக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு" 

"என்ன அந்த ஒற்றுமை? " 

"சார் கொலையாளி கொஞ்சம் சென்ஸிடிவ் ஆன ஆளு அவன் இந்த கொலைகள ஒரு சமுதாய பொறுப்பு மாதிரி நினைச்சு பன்றான்" 

"விளக்கமா சொல்லுங்க கிருஷ்ணா" 

"அதாவது சார் மும்பையில் நடந்த முதல் கொலை சதாசிவம்னு ஒரு விபசார புரோக்கரோடது அவன் கொலையானதுக்கு முந்துன நாள்தான் டெல்லில ஒரு ஸ்டூடண்ட்ட சிலர் ஓடுற பஸ்ஸுல கற்பழிச்சாங்க அந்த கேஸ் மீடியால வந்து சென்ஸிடிவ் நியூஸ் ஆச்சு...சோ மனரீதியா அந்த நியூஸால பாதிக்கப்பட்ட ஒருத்தரோ அல்லது ஒரு நெட்வொர்க்கோ எந்த சம்பந்தமும் இல்லாத அந்த புரோக்கர கொன்னு இருக்காங்க அதே மாதிரி மும்பைசிட்டிக்குள்ளயே ஒரு லேடி ரிப்போர்ட்டர கற்பழிச்ச நீயூஸ் வந்த அடுத்தநாள் தான் முதல் கொலைய போலவே கற்பழிப்புக்கு சம்பந்தமே இல்லாத உசேன் என்கிறவரோட உறுப்ப அறுத்து ரெண்டாவது கொலைய அதே மும்பைல செஞ்சிருக்காங்க சார்.. அதுக்கப்புறம் ஒரு மாசம் கழிச்சு நம்ம ஊர்ல அந்த ஸ்கூல் மேட்டர் சார்" 

"ஒரு சின்ன பொண்ன அந்த ஸ்கூல சேந்தவங்களே பாலியல் கொடுமை செஞ்சதா கேஸ் அந்த கேஸா? "

"ஆமாம் சார் அந்த நியூஸ் வந்த அடுத்த நாள்தான் இந்த கொலையும் நடந்திருக்கு"

"ஓ மை காட் இட்ஸ் வெரி ஸ்ட்ரேஞ்" 

"இதுல சிக்கலான விசயம் என்னன்னா இதெல்லாம் பன்றது ஒரு குரூப்பா இல்ல தனிப்பட்டவங்களான்னு மொதல்ல  நாம கண்டுபிடிக்கனும் ரெண்டாவதா மும்பையில ரெண்டு கொலை சோ இங்க பெங்களூர்லையும் அவங்க இன்னொரு கொலை நடத்திக்காட்டலாம்... அவங்க டார்கெட் ஒவ்வொரு எரியாவுலையும் ரெண்டு கொலையா கூட இருக்கலாம் சார்... சோ அடுத்த கொலைக்கும் பிறகு இதே மாதிரி வேற எதாவது ஏரியாவுல கொலை நடந்தா இது ஒரு நெட்வொர்க் சம்பந்தபட்டதுங்குற ஒரு கோணம் ஓரளவு உறுதியாகும் சார் " 

"நாட்டுல நடக்கிற சென்சிடிவ் பிரச்சினைக்கு அடுத்த நாள் கொலை பண்றாங்கன்னா நிச்சயமா எதோ ஒரு நெட்வொர்க்தான் இத பன்னுதுன்னு நினைக்கிறேன் போராடி போராடி சலிச்சு போன ஒரு கூட்டம் ஆயுதத்த கையிலெடுத்திருக்கு போல பிளடி பீப்பிள்" 

"பட் சார் இருந்தும் வேற ஒரு டவுட்டும் இதுல எனக்கிருக்கு எதோ நெட்வொர்க்தான் இத பன்னுதுன்னா முதல் கொலையப்பவே அவங்க எச்சரிக்கை மாதிரி எதாவது அறிக்கை விட்டிருக்கனுமே சார் மூனு கொலையிலையும் இதுவரைக்கும் அவங்க எதுவும் சொல்லல அதான் இந்த கேஸ்ல இடிக்குது" 

"மே பி தே ஆர் இண்டலிஜண்ட் பீப்பிள் அதான் மக்களுக்கே உரைக்கட்டும்னு நினைக்கிறாங்களோ?" 

"ஒருவேள இது ஒரு நெட்வொர்க் சம்பந்த பட்டதுன்னா அவங்க சொல்ல வரது ஒரே விசயம்தான் சார்.... நாட்ல எந்த ஒரு பெண்னுக்கு எதிராகவும் பாலியல் கொடுமை நடந்துன்னா ஒரு ஆண்குறி வெட்டி எறியப்படும்...அது மூலமா பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு நேர்கோட்டில் ஒரு செத்த ஆண்குறியை வைக்கப்படும் இதான் சார் அவங்க சொல்ல வர மெசெஜ்.. நமக்கிருக்குற தலைவலி இதுல என்னன்னா இனி நாட்டுல இன்னொரு பாலியல் வன்முறை நடக்காம பாத்துக்கனும் அப்பதான் அடுத்த ஆண்குறி அறுபடுதல தடுக்க முடியும் இதுக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி இந்த கேஸ் சம்பந்தமான கோணங்கள அப்படியே மீடியாவுக்கு கொண்டு போகனும் சார் இந்த விசயங்கள மீடியா மூலமா மக்கள்கிட்ட கொண்டு போய் சேத்தோம்னாதான் மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகி ஒரளவு தவறுகள் செய்வத குறைக்கலாம் அதுக்கு உங்க அனுமதி வேணும் சார்" 

"யெஸ் யூ ஆர் ரைட்.... ஓகே கிருஷ்ணா டிபார்ட்மெண்ட் சார்பா நைட்டே பிரஸ் மீட் வச்சு நீங்களே இத சொல்லிடுங்க அண்ட் பைண்ட் தி அக்யூஸ்ட்ஸ் சூன்" 

"தேங்க் யூ சார்"என சல்யூட் வைத்து அறைய விட்டு வெளியேறினார் கிருஷ்ணா 

சிவப்பு விளக்கின் முன்னே நீண்ட மலைப்பாம்பு போல பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் அரக்கோணத்தில் சிக்னலுக்காக காத்திருந்தது . 

-------------------------------------------------------------------------------

வெயில்

மழைக்காலத்தில்
வெயில் பற்றிய சிந்தனை 
எப்படி வந்ததென புரியவில்லை 
காலையில் தவறிவிழுந்து 

சிதிலமடைந்த முட்டையின்
மேலாக பெருங்குரலெடுத்து
கரைந்த காகத்தையும்
அம்முட்டையின் உயிர்க்குழம்பிருந்த
தடத்தையும் காணாது
தேடியபோது வந்திருக்கக்கூடும்
உண்மையில் வெயில்
மழையைப்போல
யாவையும் கழுவவிடுவதில்லை
இன்னும் ஆழமாக
கறை கூட்டி நினைவுறுத்துகிறது !!

Wednesday, November 5, 2014

ரசவாதம்

நாளொன்றுக்கு
ஏழெட்டு தடவை வீதம்
மொத்தக்குவியத்தையும்
குவித்து அவள்
நெற்றியில் பொட்டை
அமர்த்தியதற்கு
பிறகுதான்
ரசம் கூடுகிறது
கண்ணாடிக்கு.