Friday, May 8, 2020

சமத்துவத்தை சொல்லித்தரும் குழந்தைகளின் சினிமா.





எறும்புகளை? எலிகளை? ரோபாட்டுகளை? மீன்களை? கார்களை? டிராகன்களை? விலங்குகளை வைத்து இத்தனைச் சுவாரஸ்யமான ஒரு கதையா? என ஹாலிவுட்டின் ஒவ்வொரு அனிமேஷன் திரைப்படங்களங்களும் நமக்கு எப்பொழுதும் பெரும் ஆச்சர்யங்களை அளிப்பவை.

அப்படியவர்கள் உருவாக்கிய எல்லா திரைப்படங்களிலும், மனிதர்களுக்கு இத்தனை கற்பனை சக்தி உண்டா என்கிற கேள்வி எப்பொழுதும் நமக்கு தொற்கி நிற்கும். அதீத கற்பனை சக்தியுடனவர்கள் உருவாக்கிய அத்தனை அனிமேஷன் திரைப்படங்களிலும் முதன்மையான திரைப்படமாக ஒரு படத்தை நிறுத்த வேண்டுமென்றால் டிஸ்னி பிக்சாரின் Zootopia (2016) வைத்தான் நிறுத்த வேண்டும்.

Zootopia குழந்தைகளுக்காக எடுக்கபட்ட படமாக இருப்பினும் மொத்த மனித இனமும் பின்பற்ற வேண்டிய பல தத்துவங்களையும், சித்தாங்கங்களையும் குறியீடுகளாக கொண்ட ஒரு அற்புதமான படைப்பு. படம் நெடுக மனித இனம் கற்றுக் கொள்ள ஏராளமான பாடங்கள் பொதிந்து இருக்கின்றன.

மனிதர்களுக்கு பதிலாக விலங்குகளை கதைமாந்தர்களாக வைத்து படைக்கப்பட்ட ஒரு அற்புத உலகம்தான் ஜூடோபியா. படத்தின் கதைப்படி கற்காலம் முடிந்து, வேட்டை விலங்குகளும், இரை (தாவர) விலங்குகளும் சிந்திக்கத்துவங்கி, தங்களுக்கான ஒரு நகரத்தை படைத்து எல்லோரும் ஆரோக்கியமான பரிணாம மாற்றத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். Zootopia எனப் பெயரிடப்பட்ட அந்த நகரத்தின் காவல் அதிகாரிகளாக பலம் நிறைந்த வேட்டை விலங்குகள் மட்டுமே இருக்கின்றன. 'பலத்தில் குறைந்த, தாவரஉன்னிகளான முயல் போன்ற விலங்குகள் காவலர்கள் ஆக தகுதியற்றவர்கள், விவசாயம் செய்ய மட்டுமே தகுதியானர்கள்.' என்கிற பொதுபுத்தியை உடைத்து, முதன்முறையாக காவலர் பணிக்கு 'ஜூடி ஹார்ப்ஸ்' என்கிற பெண் முயல் ஒன்று தேர்வாகிறது. படத்தின் மையக்கதாபாத்திரமான இந்த முயலின் வழியே 'இவர்கள் இதற்காக, இந்த தொழிலுக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள்' என்கிற கருத்தை உடைத்து, முயற்சித்தால் எவரும் எவராகவும் ஆகலாம் என்கிற நம்பிக்கையை படம் இயல்பாகவே குழந்தைகளிடத்தில் விதைக்கின்றது.

அதே ஊரில் 'நிக்' என்கிற நரி பல தந்திரங்களை செய்து, ஊரை ஏமாற்றி வாழ்ந்து வருகிறது. உண்மையில், நரி அப்படிப்பட்ட வாழ்வை வாழ விரும்பவில்லை, அதன் லட்சியம் வேறு. அதனுடைய லட்சியத்திற்கு வேட்டை விலங்காக பிறந்த அதனது பிறப்பும், 'நரிகள் தந்திரம் செய்பவை' என்கிற பொதுபுத்தியும் தடையாக இருக்கின்றன என்கிற நரியின் பின்கதை நமக்குச் சொல்லப்படுகிறது. நிக்கின் கதையையும் பிறப்பையொற்றி முன்வைக்கப்படும் பொதுபுத்திகளை நோக்கி கேள்வி எழுப்பி சிந்திக்கச் செய்கிறது.

Zootopia வில் மர்மமான முறையில் காணாமல் போல விலங்குகள் பற்றிய வழக்கு ஒன்றின் மூலம் ஜூடியும்,நிக்கும் நண்பர்களாக இணைந்து துப்பு துலக்குகிறார்கள் என்பதே படத்தின் மைய முடிச்சு.

'வேட்டை விலங்குகள் மரபணு ரீதியாகவே வேட்டையாடப் பிறந்தவர்கள். வேட்டைதான் அவர்களின் பிறவி குணம். இன்று இயல்பாக எல்லோரிடமும் நட்பு பாராட்டும் அவர்கள் நாளை வேட்டை விலங்குகளாக மாறி, மற்ற விலங்குகளைக் கொன்று விடுவார்கள்' என்கிற 'பொது புத்தியை' வலுவாக நிறுவி, அதன் மூலம் அதிகாரத்தையும், பதவிகளையும் அடைந்து கொள்வதற்காகவே, zootopiaவில் ஒரு குழு சில வேட்டை விலங்குகளை கடத்தி, 'நைட்கிராவலர்' என்கிற செடியின் மூலம் அவ்விலங்குகளுக்கு வேட்டையாடும் வெறியை செயற்கையாக உண்டாக்கி வைத்திருக்கின்றன என்பதையும், அரசியல் அதிகாரத்திற்காக ஒற்றுமையாக வாழும் விலங்குகளிடத்தில் பிரிவினையை உண்டாக்கி அதிகாரத்தை அடையவேண்டி இச்செயலை செய்திருக்கின்றன என்பதையும் ஜூடியும்,நிக்கும் கண்டுபிடித்து Zootopiaவில் அமைதியையும், வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அதன் கொள்கையையும் எப்படி நிலை நாட்டுகிறார்கள் என்பதாக நிகழ்கிறது படத்தின் மீதிக்கதை.

இந்த நிலம் குறிப்பிட்ட மதத்தவர்க்கு, இனத்தவர்க்கு உரியது. குறிப்பிட்ட மத,இன அடையாளமில்லாதவர்கள் எல்லாம் இந்த நிலத்தில் வாழத் தகுதியற்ற வந்தேறிகள். அவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு 'ஒரே மதம், ஒரே இனம்' கொண்ட அகண்ட நிலமாக மாற்றுவோம் எனச்சொல்லி, மக்களிடம் பிரிவினையை உண்டாக்கிவிட்டு, அதிகாரத்தை அடைந்து கொள்ளும் தந்திரமிக்க இந்திய, உலக அரசியல்வாதிகள் அனைவரையும் Zootopia வில்லன்களாக சித்தரித்ததோடு, அத்தகைய பிரிவினைவாதிகளை ஒதுக்கிவிட்டு, மக்கள் பேண வேண்டிய ஒற்றுமையையும், சக மனிதர்கள் மேல் கொள்ள வேண்டிய அன்பையும், சமத்துவத்தையும் பற்றி குழந்தைகளின் மொழியில் பேரற்புதமாக படம் பேசியிருக்கின்றது.

நிறவெறி, மதவெறி, இனவெறி, ஜாதிவெறி, போன்ற பல பிரிவினைகள் நிறைந்திருக்கும் காலத்தில் குழந்தைகளுக்கு சமத்துவத்தையும்,
அறத்தையும், நீதியையும் சொல்லித்தர Zootopia போன்ற படைப்புகள் அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றது.


- கர்ணா சக்தி



Saturday, August 11, 2018

விஸ்வரூபம் 2 - ஆண்டவர் (எ) சர்வதேச உளவாளி


"அமெரிக்கன் ஸ்னைப்பர்" என்றொரு ஹாலிவுட் திரைப்படம். கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்தது. அமெரிக்காவுக்காக ஆதிக்கம் செய்யப்போன இஸ்லாமிய நாடுகளில், அமெரிக்க ராணுவ வீரர்கள் என்னென்ன மாதிரியான உளவியல் சிக்கல்களை நேர்கொள்கிறார்கள் என்பதாக அந்தப்படம் நிகழும். ஒபாமாவின் மனைவி முதல்,  அமெரிக்காவின் தெருக்கோடி குடிமகன்கள் வரை அமெரிக்க ராணுவத்தின் பரிதாபகரமான நிலைகளை நினைத்து உச்சுக்கொட்டி  கொண்டாடிய படம் இது என்பது வரலாறு. (ஆனால், படம் பார்க்கையில் நமக்கு இஸ்க் இஸ்க் என்றுதான் கேட்கும்) படத்தில் ஸ்னைபரான நாயகன், ஒரு இஸ்லாமிய சிறுவனை சுட நேர்கிற தருணத்தை ஒரு காட்சி அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கும். 

நாயகன் அந்த இஸ்லாமியச் சிறுவனை சுடுவானா? மாட்டானா? எனப் பார்வையாளர்களிடம் சில நிமிடங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டு, இறுதியில் பல்வேறு மனப்போராட்டங்களுக்கிடையே நாயகன் வேறுவழியின்றி, அச்சிறுவனை சுட்டுக்கொல்வதாக அந்தக்காட்சி நிறைவுறும். அமெரிக்கர்கள் 'பெண்கள்,குழந்தைகளை சுடமாட்டார்கள் என்பது பச்சைப் பொய்.' என்பதை,  அமெரிக்கர்களே ஒப்புக்கொண்டு படமெடுக்கின்ற காலத்தில்தான், நம் உலகநாயகன் 'அதெல்லாம் ஒன்னுங்கிடையாது.. நீங்க சும்மாருங்க.. அமெரிக்கன்ஸ் பெண்கள் குழந்தைகளை கொல்லமாட்டாங்க' என முன்னர் எடுத்த விஸ்வரூபத்தின் அடுத்த பாகத்தை "மக்கள் நீதி மய்யம்" சுய விளம்பரத்திற்கு பிறகு இன்னும் அழுத்தமாக ஆரம்பிக்கிறார். சென்றமுறைக்கு இந்தமுறை இன்னமும் பலபடிகள் முன்னேறி.. ஜிகாதிகளைக் குண்டுவீசிக் கொல்ல அமெரிக்கன்ஸ் கொண்டுவந்த ஹெலிகாப்டரில், ஓமரின் மனைவி மற்றும் குழந்தைகளை விசாம் ஏற்றி, படிக்கவைக்க கூட்டிப்போவதாக ஒருகாட்சியை வைத்திருக்கிறார். ஆஹா.. வாய்ப்பிருந்தால் கமல் ஓபாமாவின் மனைவிக்கும், அம்ரிக்க மக்களுக்கும் படத்தை திரையிட்டுக் காட்ட வேண்டும். அமெரிக்க குடிமக்கள் "அமெரிக்கன் ஸ்னைப்பர்" படத்தை தூக்கி கடாசிவிட்டு  விஸ்வரூப் 1&2 ஐக் கொண்டாடித் தீர்ப்பார்கள். கமல் ஆஸ்கர் கூட  வாங்கிக்கொள்ளக் கூடிய சாத்தியங்கள் திரைப்படத்தில் இருக்கிறது. 
--
யாரென்று புரிகிறதா? எனப் பார்வையாளர்களை நோக்கிய கேள்விக்கனைகளை வீசியபடியும், கையோடு கையாக நியூயார்க்கை காப்பாற்றிய படியும் முடிந்த முதல்பாகத்தின் தொடர்ச்சியாய் படம் துவங்குகிறது. விசாம் மற்றும் அவரது குழு உண்மையில் யார்? என்பதுதான் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம்.  கூடவே லண்டன் மற்றும் டெல்லியை அணுகுண்டு/ தீவிரவாத தாக்குதலில் இருந்து விஷாம் காப்பாற்றுவது படத்தில் இலவச இணைப்பு. முழுக்கமுழுக்க ஆண்டவரின் சுயபுராணத்தைப் பாடவேண்டியிருப்பதால், இந்தமுறை புறாவின் கால்களில் சீசியங்களை கட்டி நியூக்கிளியர் பாமைத் தயாரித்து வீசிக்கொண்டிருக்காமல், ஹிட்லர் காலத்தில் 1500டன் அணுஆயுதங்களுடன் கடலில் மூழ்கிய கப்பலுக்கு லண்டனை அழிக்கும் பொறுப்பைக் குடுத்துவிட்டு, லண்டனையும், போகிற போக்கில் டெல்லியையும்  காப்பாற்றுகிறார். 

கருணையே வடிவான இயேசுபிரான் அல்லது காந்தியடிகள் அல்லது அல்லா அல்லது இவர்கள் மூவரும் கலந்த சர்வதேச உளவாளியின் திரைப்படம் ஒன்றை நீங்கள் இதுவரை பார்த்ததில்லையெனில், காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள் நம்மவர் அப்படி ஓரு மனிதநேய உளவாளியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். உதராணமாக வில்லனின் ரைட் ஹேண்டான சலீம் ஆண்ட்ரியாவின் தலையைக் கொய்து விஷாமுக்கு பார்சல் அனுப்பியிருப்பார். அதற்கடுத்த காட்சியில் சலீமை கொல்லும் விஷாமுக்கு கண்கள் முழுக்க கண்ணீர் தேங்கி நிற்கும். போலவே, உமரை வீழ்த்தும் போதும் அவர் கண்களில் கருணை பொங்கி நிரம்பி வழியும். போலவே, ஓமரின் மனைவி,மகன்களை ஆப்கனிலிருந்து கடத்திக் கொண்டுபோய் அவர்களை வாழ்வாங்கு வாழவைப்பதோடு, மெடிசின், இஞ்சினியரிங்கும் படிக்க வைக்கிறார். இத்தனைக் கருணைமிகு உளவாளியை இந்திய ராணுவம் எப்படி தேர்ந்தெடுத்து, அவரை தன்னந்தனியாக விமானத்திலிருந்து தள்ளிவிட்டு, உளவு பார்க்க ஆப்கனுக்கும் அனுப்பியது என்பது நமக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், ஆண்டவரின் இயக்கம், ஸ்கீரின்பிளே என்பதால், நாம் வாய்மூடி லயிக்க வேண்டியது நம் கடமையாக இருக்கிறது. 
"பழக்கத்துக்காக கண்ணீர் வராதாயா?" எனக் கேள்வி எழுப்புகிறவர்கள்தான், ஆண்டவர் சர்வதேச தரத்தில் உளவாளியின் படத்தை எடுத்திருப்பதாகவும் பேசிக் கொள்வார்கள். 

நல்ல விசயமே இல்லையாயா? எங்க ஆண்டவர் பாப்பான தேசத்துரோகியா காட்டிருக்காரே? அதெல்லாம் பாக்க மாட்டியா? எனக் கேட்பவர்களுக்காக.. அதென்ன காட்டறது? மனுதர்மம் கொண்டு வந்ததுலர்ந்தே அவனுக தேசவிரோதிகதான?. விருமாண்டி எடுக்கும் போது பேசியாகவேண்டிய சாதிய பிரச்சினைகளை விட்டுவிட்டு சர்வதேசப் பிரச்சினையான தூக்கு பற்றி பேசுவதும், சர்வதேச அமெரிக்க சுரண்டலை பத்தி பேசவேண்டிய படத்துல அமெரிக்காவ விட்டுட்டு பாப்பான துரோகியா காட்றதும் கமலுக்கு கைவந்த கலை என்பதை குறிப்பிட வேண்டியதாகிறது.

விஸ்வரூபத்தின் ஒருகாட்சியில் விஷாமின் மனைவி நிருபமா.. வில்லன் சலீமிடம் "நீ செய்ற பாவத்தைல்லாம்,  கடவுள் பாத்துட்டுத்தான் இருக்காரு" "உங்க கடவுள் உன்னப் பாத்துப்பாரு"  எனச்சொல்லி முடிக்கிற நொடி, ஜன்னலை உடைத்துக்கொண்டு சலீமின் மீது பாயும் விஷாம், அவரைக் (பழக்கத்துக்காக அழுதுகொண்டே) கொல்லவும் செய்வார். ( குறியீடு? )

தசாவதாரம் அல்லது அன்பேசிவம் என நினைவு.  கமல் இப்படிச் செல்வார். "கடவுள் இருக்கார்னு சொல்றாம் பாரு அவனை நம்பலாம்"..  "கடவுள் இல்லன்னு சொல்றாம் பாரு அவனையும் நம்பலாம்".. " ஆனா.. தாந்தான் கடவுள்னு சொல்றாம் பாரு.. அவன மட்டும் நம்பவே கூடாது.