Tuesday, June 28, 2016

நாகராஜ் மஞ்சுலேவின் பறவைகள்


மிகச்சிறந்த செய்நேர்த்தியோடு வெளியான ஒரு படைப்பும் அதன் வீச்சும் பார்வையாளனை தொடர்ந்து அப்படைப்பு குறித்து அலசச் செய்வதோடு மென்மேலும் அதன் சிறப்பம்சங்கள் என்னென்னவென ஆராய கைப்பிடித்தும் கூட்டிச் செல்கின்றன. சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் நாகராஜ் மஞ்சுலேவின் சாய்ராத் அத்தகைய படைப்புசார் ஆராய்ச்சிகளை தொடர்ந்து கோரிக்கொண்டே இருக்கின்றன.

பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய சாய்ராத்தில் நான் குறிப்பிட விரும்பும் ப்ரத்யேக சிறப்பம்சம் என்னவெனில், கால்ஷீட் ஏதும் வாங்காது ஒரு பெரும் பறவைக் கூட்டத்தை படத்தில் நடிக்க வைத்த இயக்குனர் நாகராஜ் மஞ்சுலேவின் நுட்பத்தைதான். இவரின் முந்தைய திரைப்படமான பன்றியின் ஆரம்ப காட்சியே ஜாப்பையா பறவை ஒன்றை தொடர்வதாகத்தான் தொடங்கும். கவனித்திருக்கிறீர்களா? படத்தின் நாயகனான ஜாப்பையா நாயகிக்கு ஒரு பறவையயை பிடித்து பரிசளிக்கும் வேட்கையுடன்தான் அதில் வெளிப்படுவான். அந்த பறவைகளை தொடரும் எண்ணவோட்டம் முழுக்க முழுக்க நாகராஜினுடையது என்பது சாய்ராத்தை அலசும் போது மெதுவாக புரியவருகிறது. அவரது இரண்டாவது திரைப்படமான சாய்ராத்திலும் நாகராஜ் பறவைகளை கதையோட்டத்துடன் பயணிக்கும் முக்கியமான குறியீடுகளாக கையாண்டிருக்கிறார்.

சாய்ராத்தில் மொத்தமாக 5 காட்சிகளின் பின்னனியில் பறவைகள் அவற்றுக்கே உடைய தன்னியல்புகளோடு வருகின்றன. 

காட்சி 1,





நாயகனால் அதுவரை பார்க்க முடியாத நாயகி ஊர் பொதுக்கிணற்றுக்கு வந்திருக்கிறாள். இதை அறிந்த நாயகனின் நண்பன் நாயகனிடம் இதைச்சொல்ல அவனைத் தேடிப்போகிறான். நதியின் நடுவில் படகில் நின்றிருக்கும் நாயகனிடம் நாயகி வந்திருப்பதாக உரக்கக் கூறுகிறான். நாயகனுக்கு எதுவும் காதில் விழவில்லை அர்ச்சி எனும் நாயகியின் பெயரைத்தவிர. அவளின் பெயரைக் கேட்ட நொடியில் எதையும் யோசிக்காது சட்டென நதியில் குதித்து நண்பணை காண பெரும் இசையின் பின்னனியில் நதியில் நீந்தி வருகிறான். அதே நதியில் எதொவொரு குறுகுறுப்புடன் நிறையப்பறவைகள் நதியினைத் தொட்டுத்தொட்டு பறந்து விளையாடுகின்றன. பறவைகளில் அதே மனநிலையில் நாயகனும் நீந்தியபடி வந்துகொண்டிருக்கிறான்.

காட்சி 2,

                                             


அதுவரை காணாத நாயகியை நாயகன் ஒரு நெகிழ்ச்சியூட்டும் ஒரு வழியில் கண்டடைந்து ஒருசில வார்த்தைகளை பேசிவிட்டும், நேருக்கு நேராக அவளின் கண்களை தரிசித்துவிட்டும், கிணற்றிலிருந்து பெரும் பரவசத்துடன் வெளியேறுகிறான். 

"இந்த பிரகாசமான காதல் என்னும் தீபத்தை ஏற்றினேன். என் இரவுகள் பகல் போல் ஒளிர்கின்றன, நட்சத்திரங்களை அழைத்து இரவு முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறேன், தூங்கினால் கனவுகள் என்னை எழுப்புகின்றன,
(மனதில் ) பறக்கும் பறவைகள் முழு வானத்தையும் அணைத்துக் கொள்ள செய்கின்றன" என நாயகனையொத்த பரவசத்துடன் பாடல் ஒலிக்கிறது. அதே சமயம் நாயகன் நடனமாடியபடி இருக்கும் அந்த சோலைக்கு மேலான மாலை நேரத்து வானத்தில் பறவைகளும் நாயகனைப் போலவே மிகச்சிறந்த நடனத்தை அளித்தபடி பறந்தபடி இருக்கின்றன.

காட்சி 3,




நாயகனும், நாயகியும், ஒருசேர காதலில் விழுந்த பிறகு முதன் முறையாக தனிமையில் சந்தித்துக் கொள்கின்றனர். நாயகிக்கு சொந்தமான தோப்பில் அக்காட்சி நிகழ்கிறது. இருவரும் இணைந்து பேசியபடி சில அடிகள் நடக்கின்றனர். அவர்களுக்கிருவருக்கும் இடையில் ஒரு புதுவித அனுபவத்தின் அலை அடித்தபடி இருக்கிறது. மெதுவாக எட்டுவைத்து சில அடிகள் நடக்கின்றனர். காமிரா காதலர்களுக்கு பின்னால் இருந்தபடி அவர்களுக்கு முன்னே உள்ள வானத்தை காட்டுகிறது. ஆச்சர்யம் என்னவெனில், அங்கு ஒரு சிறு பறவைக்கூட்டம் சின்னதாக அலைகளைப்போல மேலும் கீழுமாக வட்டமடித்து பறந்தபடி இருக்கின்றன. 

காட்சி 4,




கல்லூரி விடுமுறையினால் சந்திக்க முடியாத நாயகனும் நாயகியும் அலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். நாயகன் நாயகியிடம் உன்னைப் பார்த்து மூன்று நாளாகிவிட்டது எனக்கூறுகிறான். அவள் ரசித்துக் கொண்டே மூன்று நாட்கள்தான் ஒரு வருடம் அல்ல என்கிறாள். நாயகன் உன்னைக்காணாத ஒவ்வொரு நொடியும் எனக்கு வருடங்கள்தான் என்கிறான். இந்தக்காட்சியின் போது நாயகன் நதிக்கரையில் அமர்ந்திருப்பான். அவனுக்கு பின்னால் உள்ள இளஞ்சிவப்பு வானத்திலுள்ள பறவைகள் இரு குழுக்களாக பிரிந்து பறந்தபடி இருக்கின்றன. 

காட்சி 5,





சாதிவெறி மனிதர்களால் தங்கள் காதலுக்கு பெரும் எதிர்ப்பு நேரிட நாயகனும் நாயகியும் ஊரைவிட்டு வெளியேறி ஒரு பெரும் நகரத்தில் தஞ்சமடைந்து பெரும் போராட்டங்களை எதிர்க்கொண்டு வாழ்க்கையை சுழியத்திலிருந்து ஒரு நல்லநிலைக்கு மாற்றியிருக்கிறார்கள். அவர்கள் பிறந்த கிராமத்தை போலல்லாது நகரம் அவர்களது வாழ்வை சுமூகமாக நகரச் செய்திருக்கிறது. எல்லாம் இயல்பாக போய்க்கொண்டிருக்கும் ஒரு காலை வேளையில் நாயகி தன் குழந்தையுடன் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருக்கிறாள். பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையை கடைக்கு அழைத்து செல்வதாக நாயகியிடமிருந்து வாங்கிச் செல்கிறாள். அவர்கள் சென்ற பின் நாயகி மீண்டும் வாசல் கோலத்தில் லயிக்கிறாள். அப்பொழுது நாயகிக்கு பின்னணியில் நகரக் கட்டிடங்களுக்கிடையே காட்டப்படும் வானத்தில் எதோ ஒரு சத்தத்தை கேட்டு பயந்து பறப்பதைப் போல் சில பறவைகள் படபடக்கும் ஓசையுடன் பறக்கின்றன. அடுத்த நொடி நாயகி அர்ச்சியின் சொந்தக்காரார்களாகிய நான்கு ஆதிக்கசாதி மனிதர்கள் அர்ச்சியின் வாசல் கோலத்தின் மீது இருள் (நிழல்) பரப்பியவாறு நிற்கிறார்கள். சற்றுமுன்பு பறந்து சென்ற பறவைகளையொத்த படபடப்புடன் அர்ச்சி அவர்களை எதிர் கொள்கிறாள்.


மேற்கண்ட இந்த ஐந்து காட்சிகளிலும் அசல் பறவைகளும், மனிதப் பறவைகளாக நாயகனும், நாயகியும்,  கிட்டத்தட்ட ஒரே நிலையில்தான் இருக்கின்றார்கள். இங்கேதான் தன் கதையை, கதைமாந்தர்களை, இயற்கையுடன் ஒன்றிணைத்து விருந்து படைத்த இயக்குனனும்,கவிஞனும்,காட்சி ஓவியனுமாகிய, நாகராஜ் மஞ்சுலே எனும் படைப்பாளியை நாம் வியந்து பாராட்ட வேண்டியதாக இருக்கிறது.

-கர்ணாசக்தி 

No comments:

Post a Comment