Thursday, January 29, 2015

I Live in Fear (1955) - அதிகாரங்கள் மீதான பயம்.


அதிகாரங்களுக்கிடையேயான வல்லரசு போட்டியில் தன் மேட்டிமைத்தனத்தை,வலிமையை, நிலைநிறுத்த கண்டுபிடிக்கப்பட்ட அனு ஆயுதம் என்பது பல லட்சம் எளிய மக்களை உயிருடன் எரித்து,அரித்து தின்றதும் இல்லாமல், மிஞ்சியிருக்கும் ஏனைய மனிதர்களை, அவர்தம் இருப்பிடம் குறித்த நம்பிக்கையை, எதிர்காலத்தை, இயல்பை, எப்படி சூறையாடுகிறது என்பதை துளி வன்முறையும் இன்றி மிக மென்மையான காட்சிகளில், அடுக்கி வலிமிக உணரச்செய்யும் கவிதையே இத்திரைப்படம்.

"எல்லோரும் ஒரு நாள் சாகப்போகிறவர்களே, நீங்கள் ஏன் அதற்காக எப்போதும் பயந்து  கொண்டே இருக்கிறீர்கள்?.

"நான் சாகத்தயாராகத்தான்  இருக்கிறேன், ஆனால் கொல்லப்படுவதற்குதான் தயாராக இல்லை"   - நகஷிமா

அனுகுண்டு தாக்குதல் நடந்து பத்தாண்டுகள் கழித்து, ஜப்பானின் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்  டோக்கியோவில் துவங்குகிறது கதை. டோக்கியோவின் செல்வந்தரான நகஷிமாவுக்கு அனுகுண்டு மீதான மனநடுக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது, அந்த பயம் அவர் வசிக்கும் நகரம் பாதுகாப்பானது இல்லை என்று மனதில் ஊடுருவி அவரை முழுமையாக தின்கிறது, அனுகுண்டு தாக்குதல்கள் இல்லாத பாதுகாப்பான இடம் தேடியலையும் அவர் தன் சொத்துகளை விற்றுவிட்டு  வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் முனைவுடனே எப்போதும் இருக்கிறார், இது கோட்டித்தனம் என கருதும் அவர் குடும்பம் அவருக்கு எதிரான நிலைப்பாட்டைக்கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்மீது வழக்கு தொடுக்கிறது, அதை தொடர்ந்து நகஷிமாவின் வாழ்வில் கட்டமைக்கப்படும் தொடர் சம்பவங்களை தொகுத்து இப்படைப்பின் மூலம், எப்பாடு பட்டாலும் பதில் சொல்ல முடியாத கேள்விகளை அதிகாரங்களை நோக்கி வைக்கிறார் உன்னத ஆளுமை குரோசாவா. நகஷிமாவின் ஒப்பற்ற நடிப்பின் வழி அதிகாரமல்லாத எளியவர்க்குள்ளும் ஒரு நீண்ட சலனத்தை, மெளனத்தை நீளச்செய்கிறார்.

அகிராவின் எல்லா படங்களிலும் சூரியனை காட்டியபடி ஒரு குறியீட்டு காட்சி வரும், இதிலும் வருகிறது அத்தகைய  ஒரு காட்சி, என்னவொரு உன்னத படமாக்கம், மேதைகள் எப்போதும் மேதைகளே.

உண்மையில் அந்த காலகட்டத்தில் ஜப்பானில் நகஷிமா வயதையொத்த எல்லா மனிதர்களும் அந்தபயத்தினால் அடி ஆழத்தில் பீடிக்கப்பட்டுதான் இருந்திருக்கிறார்கள், ஏன் இன்றுமே இருக்கிறார்கள், வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியில் எப்போதும் பலியாவது எளிய மனிதர்களே, அவர்கள் எல்லோருக்குள்ளும் நகஷிமாவின் அந்த தேடல் உண்டு, இந்த பூவுலகில் எளியவர்களுக்கான பாதுகாப்பான இடம் என்பது எங்கு உள்ளது என்ற கேள்விதான் அந்த தேடல்.


- கர்ணாசக்தி

நன்றி - என் ஞாயிறுகளை அர்த்தமுள்ளதாக மாற்றும் கோணங்கள் அமைப்பிற்கு.

No comments:

Post a Comment