Thursday, December 4, 2014

காவியத்தலைவன் (2014)


தமிழ்சினிமாவில் வரலாற்றை மையப்படுத்திய புனைவு கதையொன்றை, அந்த வரலாற்றின் அட்சுரம் பிசகாமல் சொல்வதென்பது கடினமான காரியம்தான். மாறாக அயல் சினிமாக்களில் அது வெற்றிகரமாக நிறுவப்பட்டே வந்திருக்கிறது உதாரணமாக டைட்டானிக்,பியர்ல் ஹார்பர், என ஏக வெற்றிச்சித்திரங்களுண்டு.

காவியத்தலைவனும் அத்தகைய முயற்சியே ஆனால் அது வெற்றிகரமாக சொல்லப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழகத்தில் நாடக கலை என்பது ஒரு நெடிய வரலாற்றைக்கொண்டது, அதை மையப்படுத்திய புனைவை மிக சிறப்பாக சொல்லவில்லை. அனேக இடங்களில் இந்த திரைப்படம் தமிழ்சினிமா ரசிகனை சமரசம் செய்தே வெளிப்பட்டிருக்கிறது, அதுவே இதன் மிகப்பெரும் பலவீனமாக இருக்கிறது. மிக மிக தொய்வான திரைக்கதை இதை ரசிக்கும் படியாக காட்டவில்லை என்பதே நிஜம்.

ஒரு நாடக குழுவை சார்ந்த இரு பெரும் நடிகர்களுக்கிடையில் ஒருவருக்கு நிகழும் யார் பெரியவன், என்ற மனப்போராட்டமும் அதை தொடர்ந்து அந்த நடிகன் நிகழ்த்தும் சில விளைவுகளும் ஆனதே நாடக வரலாற்றையொற்றிய இத்திரைப்படம்.

Black swan என்றொரு அமெரிக்க திரைப்படம் உண்டு. பாலோ நடனம் என்ற கலையை மையப்படுத்திய அந்த கதையில் அக்கலையை உயிராக நினைத்து  (ப்ரித்விராஜ்  போல ) வாழும் பெண் கலைஞர் ஒருத்திக்கு நாடக கலையை போலவே ராஜபார்ட், ஸ்த்ரிபார்ட், மாதிரியான அங்கீகாரம் தொட்டு ஏற்படும் மன நிலைகளை அதன் பொருட்டு அந்த அங்கீகாரம் அவளை கூட்டிச்செல்லும் அதீத விளைவுகளை மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார்கள்.

ஏறக்குறைய அதே மனப்போராட்டத்தையொத்த காவியத்தலைவனில் அது சிறப்பாக சொல்லப்படுவதற்கு மாறாக தலையை சுற்றி மூக்கை தொடும் பழைய பல்லவி கலந்த எளிதில் யூகிக்க கூடிய திரைக்கதையால், மிக தட்டையாகவே வெளிப்பட்டிருக்கிறது. இதுவே இந்த படத்தின் மிகபெரிய பலவீனமாக இருக்கிறது. அது போக பிரித்விராஜ்,வேதிகா, நாசர் தவிர்த்த பாத்திர தேர்வும் ரகுமானின் இடைசெருகலான இசையும்,அந்த பலவீனத்தோடு கைக்கோர்த்து மிகுந்த ஆயாசத்தைத்தான் தருகிறது.

ஆசானின் ஒவ்வொரு கதையையும் ஒரு திரைப்படத்தை படிப்பது போன்ற சுவாரஸ்யத்தை தரக்கூடியது, ஆனால் ஏனோ அவர் பங்கு பெற்ற ஒவ்வொரு திரைப்படமும் கொட்டாவி வரக்கூடிய புத்தகத்தை படிப்பது போன்ற அயற்சியத்தான் தருகிறது, அன்பின் ஆசானே பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம்.

இத்தனை பலவீனங்களையும் கடைந்தெடுத்துப்பார்த்தால் பலமாக ஒரே ஒருத்தர்தான் இருக்கிறார். அவர் ப்ரித்விராஜ். மனிதர் கோமதி பாகவதராக அனாயசமாக வாழ்ந்து தள்ளியிருக்கிறார். கொழும்பிலிருந்து திரும்பியதும் சித்தார்த்தை விசாரித்து விட்டு, அப்படி ஒருவர் இல்லையென்பதாக பதில் வந்ததும் உதட்டோரமாக குரூரப்புன்னகையொன்றினை உதிர்ப்பதாகட்டும், காய்ச்சலில் கிடந்தாலும் ஈகோவின் பொருட்டு நடிக்க கிளம்புவதாகட்டும் என்னே ஒரு அற்புதமான நடிப்பு.

ப்ரித்விராஜ் உன் மனசுல என்னதான் இருக்கு என வேதிகாவை கேட்கும் போது வேதிகா பின்புறமாக இருக்கும் சித்தார்த்தை பார்க்கும் காட்சியிலும், கர்ணமோட்சம் நாடகத்தின் இறுதியில் அர்ச்சனாக சித்தார்த் எதை ஜெயித்தாய், என பாடுவதாக காட்டியிருக்கும் காட்சியிலும் மட்டுமே வசந்தபாலன் படம் என்பது நினைவுக்கு வருகிறது, மற்றபடி சொல்ல ஏதுமில்லை.

எவ்வளவு குறைகள் இருப்பினும் தமிழ்சினிமாவில் இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கது என்பது மட்டும் நிஜம். ஆகவே திரை அரங்கில் வருகிற கொட்டாவியையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டேனும்,  காவியத்தலைவன் என்கிற இந்த சீரிய முயற்சியை வரவேற்போம்.

1 comment:

  1. ப்ருத்விராஜ் நடிப்பெல்லாம் சரிதான் . மலையாள தமிழ் சகிக்கல அக்கால நாடகத்தமிழுக்கு

    ReplyDelete