குடலைப்பிடுங்கும் நாற்றத்துடன் உள்ள சாக்கடைகளையும்,கால்வாய்களையும்,மலக்கிடங்குகளையும்,குப்பைத்தொட்டிகளையும்,
எப்போதும் போல நடுத்தர,கீழ்மட்ட மக்களே புலங்கி அதை அடித்தட்டு மக்கள் சுத்தம் செய்வதென்பது,
காலம் காலமாக ஒரு புறமாக நடந்து வந்தாலும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் அவர்களால்
முன்மொழியப்பட்டு, இந்தியாவின் ஆகச்சிறந்த சீமான்களாலும்,சீமாட்டிகளாலும் வழிமொழியப்பட்ட
“க்ளீன் இந்தியா” எனும் திட்டம் எப்படி நடைபெறுகிறது என்பது நாமனைவரும் அறிந்த உண்மை.
அந்த சாக்டைகள்,கால்வாய்கள்,பொதுகழிப்பிடங்கள், மூக்கை வைத்து கூட பார்க்க விரும்பாத
பெரும் சீமான்களும்,சீமாட்டிகளும், குப்பைகளே இல்லாத சாலையில் குப்பை இருப்பதாக காட்டி,
அதை சுத்தம் செய்வதாகவும் காட்டி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்தடையும், புகைபடங்களில்
சில நூறு சமூக சேவக,சேவகிகளை அடையாளம் காட்டியதே அந்த க்ளீன் இந்தியா திட்டத்தின் ஆகச்சிறந்த
சிறப்பென்றால் அது மிகையல்ல.
அப்படிப்பட்ட அந்த வெற்றிகரமான திட்டத்திற்கு, பிறகு நமது பாரத
பிரதமரால் முன்மொழியப்பட்டுள்ள அடுத்த திட்டம், ”மேக் இன் இந்தியா” வாகும். அதாவது
பன்னாட்டு முதலாளிகளையும்,நிறுவனங்களையும், எல்லா பொருட்களையும் இந்தியாவிலே உற்பத்தி
செய்து கொள்ளலாம். அதற்கு தேவையான அத்தனை வளங்களும் எங்களிடம் தாரளமாக இருக்கிறது,
விரைந்து வாரீர், வந்து பயனடைவீர். என்பதே அந்த திட்டத்தின் சாரம். இதன் மூலம் இந்தியாவில்
தொழில் வாய்ப்பு பெருகும், பொருளாதாரம் பெருகும், வளங்கள் சுரண்டப்படும் என்பது ஒருபுறமாக
இருப்பினும் இந்தியா நிச்சயமாக வல்லரசு ஆகிவிடும் என்பது ஊர்ஜிதம் என நம்பும் அப்பாவி
மக்களுக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.
“ARGO” என்றொரு அமெரிக்க திரைப்படம் வந்தது, அத்திரைப்படத்தின்
கதையாவது ஈரானின் அதிபர் ஒரு அமெரிக்க கைக்கூலி என அந்நாட்டு மக்கள் ஏக வெறுப்பில்
இருந்து வருகையில், திடிரென உருவாகும் உள்நாட்டு கிளர்ச்சியால் ஈரானில் உள்ள அமெரிக்க
தூதரகம் அம்மக்களால் சிறைபிடிக்கப்படுகிறது, தூதரகத்தில் பணியாற்றும் 6 அமெரிக்க அலுவலர்கள்
அங்கிருந்து தப்பி அங்கிருக்கும் கனடா நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் வீட்டில் தஞ்சமடைகிறார்கள்,
அவர்களை மீட்க அமெரிக்காவில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி போலியாக ஒரு சினிமா குழுவை
உருவாக்கி ஈரானில் படமெடுக்க லொகேஷன் பார்க்க வந்திருப்பதாக, ஈரானின் கிளர்ச்சியாளர்களை
நம்ப வைத்து, அந்த அறுவரையும் வெற்றிகரமாக மீட்டு தாய்நாடு சேர்ப்பதாக ( வழக்கம்போல
அமெரிக்க தேச சொம்புகளையடித்து) உணர்ச்சிகரமாக முடியும் அத்திரைப்படத்தின் கதை.
இந்த சினிமாவில் வரும் திரைக்கதைக்கும், அதன் நடிகர்களுக்கும்
சற்றும் சளைக்காத ஒரு கதையையும், ஆகச்சிறந்த நடிகர்களின் நடிப்பு மட்டும் மிகச்சிறப்பான
திரைக்கதைகளால் கட்டமைக்கப்பட்டதே இந்தியா எனும் நாடும் அதன் அதிகாரிகளும். 1980களில்
இப்போதைய ”மேக் இன் இந்தியா” போலவே, இந்தியாவில் உற்பத்தி செய்ய அப்போதைய எதோ ஒரு திட்டத்தின்
கீழ் வந்த கம்பெனிதான் “யூனியன் கார்பைடு” எனும் நிறுவனம். போபாலில் 1984 டிசம்பர்
2,3, தேதிகளில் அந்நிறுவனம் மெதில் ஐசோ சயனைட் எனும் நச்சை காற்றில் கடத்தி கொத்து
கொத்தாக மனித பலிகளை நிகழ்த்திய வரலாறு நாமறிந்ததே. உலகமே துக்ககரமாக இருந்த அந்த இரண்டு
நாட்களில், பெரும் கோரத்தின் மிச்ச உயிர்களும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும்
போதே சூட்டோடு சூட்டாக அந்த நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை அந்த ARGO திரைப்படத்தின்
அத்தனை சுவாரஸ்யங்களோடும் அவரது தாய் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தது மட்டுமின்றி
இன்று வரை அவரின் ஒற்றை கேசத்துக்கு எதிராக ஒரு பெட்டி கேசை கூட போட முடியாத ஆகச்சிறந்த
கலைஞர்களை கொண்டதே நமது அரசாங்கமும்,அதிகாரமும்.
அத்தனை உயிர்களின் பலி கொண்ட அந்த
நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் தனது 62 வயதில் மிக பத்திரமாக தன் தாயகம் சென்று
சேர்ந்து தனது 92 வயதுவரை நிறைவாழ்வு வாழ்ந்து உயிர் நீத்தார். என்பது இனி எப்போதும்
மாற்றியெழுத முடியாத கசப்பான உண்மை.
நடந்தவை எல்லாம் போகட்டும், தற்போதைய ”மேக் இன் இந்தியா” திட்டங்களோ,
அதையொற்றி நம் நாட்டில் படையெடுக்கப்போகும் பன்னாட்டு நிறுவனங்களோ எவ்வித தயக்கமுமின்றி
தைரியமாக இங்கு படையெடுக்கலாம், பொருளாதாரத்தை பெருக்கலாம், போபால் விஷவாயு போல வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த எதேனும் விபரீதங்களை அக்கம்பெனிகள் நிகழ்த்தினாலும், அவர்களை
பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க இங்கு ஆட்கள் உண்டு, அடுத்த நாளைப்பற்றிய ஆயிரம் கனவுகளை
சுமந்து உறங்கி மடிந்து போன மக்களின் ஆன்மாக்களுக்கு
இன்றுவரையும், இனிமேலும் பதில் சொல்லத்தான் இங்கு யாரும் இல்லை.
மேக் இன் இந்தியா-Anything,Anywhere,Anyways.
Good write up. Makkalukku sendradaya vendiya kural.
ReplyDeletePS:Waren Anderson 62 vayadhil thappi odinaar.
thanks sir.
Delete