Saturday, September 26, 2015

குற்றம் கடிதல் - அடுத்த நொடியின் தீவிரம்.

குற்றம் கடிதல் - அடுத்த நொடியின் தீவிரம்.
---------------------------------------------------------------------------------------------------------------



ஆசிரிய சமூகத்தின் இயல்பான நடவடிக்கைகளில் ஒன்று குற்றம் கடிதல். வகுப்பில் மட்டும் கண்டிப்பாக காட்டிக்கொள்ளூம் ஆசிரியை ஒருவர் ஒரு குறும்புக்கார மாணவனின் குற்றத்தைக்கடியும் இயல்பான ஓர் நிகழ்வு, ஒரு மிகையூட்டும் தீவிரத்தை உண்டு செய்துவிடும் சூழ்நிலையில், அந்நிகழ்வில் நேரடியாக பாதிக்கப்பட்ட, பங்குபெற்ற, மனிதர்களோடு, வெறுமனே பார்வையிடும், கருத்திடும், சமூகத்தின், ஒரு இரவு/பகல் சூழ்நிலைகளும், அந்நிகழ்வை அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களும், அதன் முடிவுமே, குற்றம் கடிதல் படத்தின் கதை

ஆத்திரத்தின் அடுத்த நொடியின் தீவிரம் சார்ந்து பின்னப்பட்ட இயல்பான இந்தக்கதையில் பள்ளி,கல்வி,சமூகம், சார்ந்து பரந்துபட்டு விரியும் ஒர் ஆரோக்கிய பாதையை நெய்யத மாயஜால வித்தைக்கு இயக்குனருக்கு மானசீக மரியாதையுடன்  ஓராயிரம் பூங்கொத்துகளை தரலாம். கதையையும் தாண்டி இந்தப்படைப்பில் அழகியலையும்  மெச்சிக்கொள்ளும் படி நெய்திருக்கிறார்

கதை நாயகியின் போட்டோக்கள் ஒட்டிய ஒருபக்க செல்ஃப் கதவை நாயகி மூடிய பின் அவள் நாயகனின் போட்டோக்கள் நிறைந்த மறுபக்க செல்ஃப் கதவையும் மூடும் காட்சியினூடே அவர்களுக்குள் நிகழ்ந்திருந்த திருமண நிகழ்வை, தம்பதிகளின் இயல்பான வசனங்களுக்கு பின்ணனியில் கவிதையாக விரித்து சொல்லும் காட்சியும். குற்றத்திலிருந்து தப்பிக்க கிடைக்கும் அறிவுரைகளோடு எதைச்செய்வதெனப் புரியாமல் தப்பிப்போக திரும்பும் நாயகியின் கால்களில், அவளையறியாமலே மாட்டிக்கொண்டு துருத்தும் பாலீத்தின் பை காட்சியும். ஆத்திரங்களோடு குற்றவாளியைத் தேடிப்போகும் தோழர். அந்த வீட்டில் நடக்கும் மதப் பிரார்த்தனைக் கூட்டம் முடியும் வரை காத்திருக்கும் காட்சியும், பாரதியின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலுக்கு மொத்த சூழ்நிலைக்கும் தீர்வாக பொருத்திய காட்சிகளும், இறுதிக்காட்சியில் அன்பளிப்பாக சேர்க்கப்போகும் புத்தகத்தின் முதல் பக்கத்தில், உரியவரின் பெயரை நிரப்பிய பின் அட்டையை மூடும் போது அந்தப் புத்தகம்  மாக்ஸிம் கார்க்கியின் தாய்க்காவியம் எனக்காட்டுவதும், இந்த குறிப்பிட்ட காட்சி, அதற்கு முந்தைய காட்சிகளோடு பொருந்திப்போகும் அந்த அற்புத சூழலும், என காட்சிவாரியாக இந்தப் படைப்பின் அழகியலை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்

"தப்பு செஞ்சவனுக்கு அவன் செஞ்ச தப்பு என்னன்னு புரியனும் அப்பத்தான் மறுபடியும் செய்ய மாட்டான்

"ரோட்டுல எவஞ்செத்துக்கிடந்தாலும் பரவால, உங்களுக்கு பங்க்சுவாலிட்டியா போயாகனும் இல்ல?" 

"ஒரு கன்னத்துல அறைஞ்சா மறு கன்னத்த காட்டிகிட்டு நிக்கிறவங்க நாங்க இல்ல

போன்ற வசனங்களில் நிறைய எழுத்து அழகியலும் கைக்கூடிய உன்னத படைப்பு இது

மேலும் மேலும் மெருகூட்டும்படியாக இதில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களின் பங்கும் அசாத்திய அழகியலை உண்டு செய்கிறது.. மிக முக்கியமாக நாயகி.. எல்லா நிகழ்வுக்கும் நூறு சதம் பொருந்திப்போகும் இயல்பை, இயலாமையை, வெறுமையைதீவிரத்தை, மனப்போக்கை, அனாயசமாக கடத்திவிடுகிறார். தமிழ் சினிமா வரலாற்றில் மிக மிக முக்கியப் பங்கை வகித்த நாயகி இவர்தான். மேலும் துறுதுறுவென ரசிக்கச்செய்யும் குறும்புகள் புரியும் அச்சிறுவனும், அவன் தாய்மாமாவாக வரும் பாவலும் (மெட்ராஸ் விஜி), பிரின்சிபலும் அவர் மனைவியும், பாலியல் கல்வி குறித்து பாடம் நடத்தும் ஆசிரியையும் என மிக மிக நேர்த்தியாக இவர்கள்தம் உழைப்பை விதைத்திருக்கிறார்கள்

எதை மீதும், யார் மீதும்  குற்றம் சுமத்தாமல் சமூகத்தின் தற்போதைய இருப்பை இயல்பாக காட்டியதோடு, ஆசிரியர்-மாணவர்களுக்கிடையே தேவைப்படும்  அணுகுமுறையை, பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை, மிக நேர்த்தியாக  நிகழ் சமூகத்தின் அழுக்கை கடிதலை, சம/எதிர்கால சமூகம் சார்ந்த ஆரோக்கிய தொடக்கத்தை, விரும்பும் இந்த உன்னத படைப்பாளியின் அக்கறை மிகு படைப்பிற்கு சல்யூட். படைப்பாளி என்கிற பதத்தையும் மீறி உச்சிமீது ஏறி நின்று வழிகாட்டும் நம் சக மனிதனுக்கும் சல்யூட்


-- கர்ணாசக்தி 

No comments:

Post a Comment