Saturday, May 9, 2015

கொலை நினைவுகள்

கொரியாவின் கிராமமுமல்லாத நகரமும் அல்லாத ஒரு சின்ன ஊரில் துவங்குகிறது படம். அந்த ஊரில் ஒன்றுமறியாத சில அப்பாவிப் பெண்கள்  தொடர்கொலைகளுக்கு பலியாகின்றனர். நிகழ்கின்ற அக்கொலைகளின் கொலையாளியைத்தேடி.. கொலைவளையத்திற்குள் வரும் சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும் இரு அதிகாரிகளின் விசாரனையும்,தேடல்களுமே இந்த
Memories of Murder (2003) "Salinui chueok" (original title) எனும் கொரியத் திரைப்படம். 

                                          

இரு அதிகாரிகளின் மாறுபட்ட பார்வைகளும், கோணங்களும், கொலையாளியை நெருங்குகின்றனவா என்பதும்.. இந்தத்தேடல் சூழ்நிலை உளவியல் பூர்வமாக அந்த அதிகாரிகளை எப்படி கையாள்கிறது என்பதும், அடுத்தடுத்த கொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்க காட்சிகளோடு ஒன்றிய பார்வையாளர்களான நம்மையும் அந்த அதிகாரிகளோடு வெறி கொண்டு கொலையாளியை தேடச்செய் பாங்கும் இந்த படத்தின் உன்னத சிறப்பம்சம்.

பொதுவாக படங்கள் முடியும் தருவாயில் திருப்திகரமான அனுபவத்தை தருவதும்,  எப்போது படத்தை முடிப்பார்கள் என ரசிகனை கதறச்செய்வதுமான இரண்டு கோட்பாடுகளிலேயே அனேக திரைப்படங்கள் வந்துள்ளன.. ஆனால் இந்தபடத்தில்தான் அந்த மாயாஜாலம் நிகழ்கிறது.. இந்த படம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கும் தருவாயில் பார்வையாளர்கள் இதன் இயக்குனரிடம் மானசீகமாக முடித்துவிடாதே.. முடித்துவிடாதே… என கெஞ்சிக்கொண்டே இருப்பார்கள்/இருந்தேன்.. ஆனால் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் முடித்தார் என்பது வேறுகதை. அந்தளவு அற்புதமான திரைப்படம் இது.

உரக்கக் கத்தியே சொல்கிறேன்.. இந்த படத்தைப்போல ஒரு க்ரைம் படத்தை உங்கள் வாழ்க்கையில் பாத்திருக்க முடியாது.. இனி பார்க்கவும் முடியாது.. எனக்கு அப்படித்தான் தோன்றியது, இதுவரை நான்பார்த்த அத்தனை க்ரைம் படங்களையும் புரட்டிப்போட்ட ஒரே திரைப்படம் இந்த படம்தான்.  காலம்காலமாக நாம் பார்த்து விதந்தோந்திய பல க்ரைம் படங்களின் முடிவுகளை, தர்கங்களை,கட்டமைப்பை, எனக்குத்தெரிந்து கட்டுடைத்த ஒரே திரைப்படமும் இதுதான்.

எழில் கொஞ்சும் வயல்கள் சூழ்ந்த அழகியலில் வெட்டுக்கிளியை கபக்கென்று பிடிக்கும் ஒரு சிறுவனை காட்டியவாறு முதற்காட்சி துவங்குகிறது, உண்மையில் அந்தக்காட்சி மட்டும்தான் இந்த படத்தின் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் ஒரே ஆசுவாசம்.. ஒரு வகையில் அந்தக்காட்சி பார்வையாளனை மெல்லிய மனோ நிலையில் உட்காரச்செய்யும் வித்தை.. எழில் சூழ்ந்த வயல்வெளிகளில் அந்த வெட்டுக்கிளியை பிடிப்பது போல அத்தனை சுலபமானதல்ல இதன் அடுத்தடுத்த காட்சியோட்டம் என்பதும், ஆரம்ப காட்சியில் நாம் கொண்ட மெல்லிய மனோநிலையில் மீதிய காட்சிகளில் நாம் ஒருபோதும் இருக்கவில்லை என்பதும் இறுதியில்தான் நமக்குப் புரிகிறது.

முன்ன பாத்த கிரைம் படத்தை எல்லாம் அழிச்சுட்டு இதப்பாரு.. இதாண்டா உண்மையான க்ரைம் படம், இதான் படைப்பு, பாத்துக்க என கெத்தாக சொல்லும்   எனும் படைப்பாளி கடவுளின் உன்னதம் இந்த திரைப்படம்.


1 comment:

  1. Everything is very open with a very clear clarification of the issues.
    It was really informative. Your website is very useful.
    Thank you for sharing!

    My webpage: site ()

    ReplyDelete